பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்த படலம்

127

வந்து முலை தந்து உம் நிலையை மாற்றுவார் அப்பொழுதுதான் உமக்கு விதித்த சாபம் தீரும்" என்று சொல்லிப் போனார்.

அச்சாபத்தின்படி பன்றிக் குட்டிகளாக அவ்வூர்ப் புறங்காட்டில் பிறந்தனர். அவற்றின் தந்தையும் தாயும் பன்றி அரசனாகவும் அரசியாகவும் இருந்தனர். இராசராச பாண்டியன் வேட்டையாட வந்த போது காட்டு விலங்குகளைக் கலங்க வைத்தான்; பன்றிகள் பதறின; நான்கு பக்கமும் சிதறின. அவை அவர்கள் அரசன் அரசியிடம் வந்து கதறின. வீரம் மிக்க பன்றி அரசனை எதிர்ப்பது என்று முடிவு செய்தது. பன்றிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குன்று போல் குவிந்து தாக்கின: இறுதியில் ஆண் பன்றியும் பெண் பன்றியும் போரிட்டு உயிர் துறந்து வீர சுவர்க்கம் அடைந்தன.

பால் கொடுக்க முடியாமல் பரமன் திருவடியை இப்பன்றிகள் அடைந்து விட்டபடியால் அதன் குட்டிகள் பன்னிரண்டும் அனாதைகள் ஆயின. அவை அழுத அழுகை மீனாட்சி அம்மையின் செவிகளில் பட்டது: அவர்களிடம் இரக்கம்காட்டும் அம்மையாரின் குறிப்பறிந்து உயிர்களின் பரமபிதாவாகிய இறைவன் பன்றியின் உரு வெடுத்து அவற்றிற்கு முலைப்பால் ஈந்தார்.

அடுத்த பிறவியில் மானிட உருவும் பன்றியின் முகமும் கொண்ட கலவைப் பிறப்பைப் பெற்றனர். அவர்கள் அமைச்சர்களாக இருந்து பணியாற்றினர்.

பன்றி போரில் பட்டு உயிர் துறந்த இடம் மலையாக மாறியது; பன்றிமலை என்று யோகிகளும் தவசிகளும்