பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்சுமந்த படலம்

165


மண் வாசனையை நேரில் அறிய விண்ணவர் வழிபடும் தேவனாகிய சோமசுந்தரர் தலையில் சும்மாடுகட்டி மண்வெட்டியோடு இடுப்புக்கு ஒரு ஆடையும் மேலுக்கு ஒரு ஆடையும் தாங்கி வாட்ட சாட்டமான வாலிபத் தோற்றத்தோடு கூலிக்கு ஆள் தேவையா?' என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்தியை நோக்கி வந்தார்.

"சுந்தரனே; இங்கே வா; என்று அழைத்தாள் அந்தப் பாட்டி. எந்திரம் போல் சுற்றி வந்து அவள் முன் நின்றான்.

"கூலிக்கு ஆள் வர முடியுமா?"

"வருகிறேன்; என்ன தருகிறாய்?"

"பிட்டுத் தவிரத் துட்டு என்னிடம் இல்லை தம்பி"

"உதிர்ந்த பிட்டுகளைத் தந்தால் போதும் பசியாறக் கொடு; அது போதும்"

'சரி' என்றாள்

"களைத்து வந்திருக்கிறேன்; முதலில் பிட்டு கொடு" என்றான்.

"தேவர் அமுதினும் இனியது" என்று சுவைத்துப் பாராட்டினான்.

வேலை செய்யாமலேயே ஓடிப்பாடி ஆடித்திரிந்து விட்டுப் பசிக்குது" என்று சொல்லிக் கை நீட்டினான்.

அம்முதியவளும் முகம் கோணாமல் சுட்ட பிட்டை எல்லாம் அவனுக்கே தந்து மனம் மகிழ்ந்தாள்.