பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

திருவிளையாடற்புராணம்


மற்றவர்கள் பங்கெல்லாம் அடைபட்டு முடிந்தன; கிழவியின் பங்கு மட்டும் அப்படியே இருந்தது. அதன் வழியாக வெள்ளம் கரை மீறி வெளியேறியது.

“யாரது? யாருடைய பங்கு?” என்று அதட்டிக் கேட்டனர் மேலதிகாரிகள்.

“வந்தியின் பங்கு” என்றார் கூலியாள்.

“ஏன் அடைபடாமல் இருக்கிறது”

“தடைபடாமல் பிட்டு உண்கிறேன். தின்று முடிய வில்லை” என்று எதிர் பேசினான்.

அரசனிடம் ஆட்கள் கோள் மூட்டினர். “இந்த ஆள் மட்டும் தன் கடமையைச் செய்யவில்லை. பார்த்தால் பசி தீரக் கூடிய அழகு அவனிடம் இருக்கிறது. பரம்பரைத் தொழிலாளியாகத் தெரியவில்லை; பார்த்திபன் மசன் போல் மேனிப்பொலிவோடு இருக்கிறான்; பெரிய வீட்டுப் பிள்ளை போல் இருக்கிறான்; அவனை அடிக்க எங்களுக்கு மனம் வரவில்லை; கட்டிப் பிடிக்க அவன் அகப்படவில்லை என்று அறிவித்தனர். பாண்டியன் கையில் பொற்பிரம்பு ஒன்று ஏந்திக் கட்டிய கரைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு மன நிறைவு கொண்டு வந்தவன் பல் ஒன்று உடைந்த பொக்கை வாய் போன்று இருந்த இந்தக் கரைப் பகுதியையும் கண்டான். ”யார் இக்கரைகட்டவேண்டியது அக்கரை காட்டவில்லையே" என்று வினவினான்.

குந்தியிருந்த வந்தி எழுந்து நின்றாள். “என் பங்கு இது” என்றாள். “ஏன் அடைக்கவில்லை” என்று கேட்டான் “என் ஆள் இன்னும் பிட்டுத் தின்று முடிக்க வில்லை” என்று கூறினாள்.