பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்திரன் பழி தீர்த்த படலம்

17

கொண்டான். இங்கே இந்திரப் பதவி இடம் காலியாக இருந்தது. தேவர்கள் சென்று அழைத்து வந்தனர். இந்திரப்பதவி என்றாலே சுந்தரியாகிய இந்திராணியை அடைவதில் ஆர்வம் காட்டினான். செய்தி அறிந்த இந்திராணி செய்வது அறியாது திகைத்தாள். தேவ குருவாகிய பிரகஸ்பதி "கவலைப்படத் தேவையில்லை; அவனைப் பல்லக்கில் வரச்சொல், பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி ஆறுதல் தந்தார்.

"இந்திரனாக இருந்தால் அவன் பல்லக்கில் வருவது வழக்கம். அவ்வாறு புதிய இந்திரனை வரச்சொல்" என்று அழைப்பு விடுத்தாள். ஆசை அனல் அளவு அதிகம் ஆகியது. அவன் அறிவு மங்கியது. பதவிக்கு வருபவர் அதனை ஒரு புனிதப் பணியாகக் கொள்ளாமல் ஒழுக்கக் கேட்டுக்குப் பயன்படுத்துவதில் அவன் விதி விலக்கல்ல. கற்பு பெண்ணின் தனி உரிமை: அதை அவள் பறிகொடுக்கும் சூழ்நிலைக்கு அவள் ஆளாயினாள். பாரதக்கதையில்வரும் பாஞ்சாலி துரியன் முன் செல்லும் நிலையை அவள் அடைந்தாள்.

துரியோதனாதியர் கொடுமைக்கு அஞ்சிக் கண்ணனிடம் முறையிட்ட பாஞ்சாலி திரெளபதி போல இவள் ஆசானிடம் முறையிட்டாள். அவர் துச்சாதனின் துகிலுரிப்பில் இருந்து திரெளபதியைச் காப்பாற்றிய கண்ணனைப் போல சமயத்துக்கு வந்து உதவினார்.

"வருக என்று சொல்லி அவனுக்கு அழைப்பு விடுக" என்றார்.

வழக்கப்படி இந்திராணியிடம் செல்பவர் முனிவர் எழுவர் தாங்கும் பல்லக்கில் வருவது வழக்கம். அவ்வாறே அவனும் வந்தான்.