பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

திருவிளையாடற்புராணம்


இறைவன் திருவருளால் விமானத்திற்குக் கிழக்கே ஒரு வெள்ளியம்பலமும் மாணிக்க மேடையும் தோன்றின.

சிவகணங்கள் மொந்தை என்னும் சிறிய மத்தளம் கொண்டு. முழக்கம் செய்ய, நந்தி மா முழவு கொண்டு தாக்க, நாரணன் இடக்கை என்னும் முழவினை ஆர்க்க, தும்புரு, நாரதர் இருவரும் இசைந்துபாட, துந்துபிகள் ஒலிக்க, கலைமகள் சுதி கூட்ட, பிரமன் யாழிசைக்க, தேவர்கள் கற்பகப் பூ மழை சொரிய முயலகன் மீது வலப்பாதம் வைத்து மிதித்துக் கொண்டு இடது காலை மேலே தூக்கி மற்றும் நாட்டிய முறைப்படி குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் பனித்த சடையும் எடுத்த பொற் பாதமும் உடைய இறைவன் திருக்கூத்து ஆடினார்.

பதஞ்சலியும் வியாக்கிரபாத முனிவரும் மற்றும் குழுமி இருந்த முனிவர்களும் தேவர்களும் கந்தருவர் இருடிகள் முதலியோரும் இத்திருக்கூத்தைக் கண்டு பரமானந்தத்தில் முழுகினர். பராபர முதற் பொருளாகிய பரமனைத் துதித்துப் பாடினர். பதஞ்சலியும் வியாக்கிரரும் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினர். அவர்களை எழுப்பி வேண்டுவது யாது என்று வினாவினார்.

இதே திருக்கூத்துக் கோலத்தில் நிலைத்து நின்று எங்களுக்குத் தரிசனம் தரவேண்டும் என்றும், அவ்வாறு தரிசிப்பவருக்குச் சித்தி நிலை கிட்ட வேண்டும் என்றும் வேண்டினர். இறைவன் அவ்வாறே ஆகுக என்று அருள் செய்தார்.

இத்தாமரைக் குளத்தில் முழுகி, நிறை பொருளாகிய தாண்டவ மூர்த்தியைத் தரிசிப்பவர்கள் அவர்கள் வேண்டும் வரங்களையும் பேறுகளையும் பெற்றுப் பயன் அடைந்து வருகின்றனர்.