பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்

47


கங்கை நதி பாய்ந்ததால் வைகை நதியில் நீர்ப் பெருக்கு மிகுந்தது; அது புண்ணிய நதியாக மாறியது. அதனால் அதில் நண்ணி நீராடியவர்கள் நற்கதி அடைந்தனர். கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை அன்றே சிவபெருமான் உருவாக்கி வைத்தார்.

சிவனின் சடையில் இருந்து இறங்கி வந்ததால் அது 'சிவகங்கை' என்றும், அதில் முழுகுபர் ஞானம் பெறலாம் என்பதால் 'சிவஞான நதி' என்றும், காற்றினும் வேகமாகக் கடுகி வரலால் 'வேகவதி' என்றும் பெயர் பெற்றது. நூல்கள் இதனைப் புகழ்ந்து பேசுவதால் 'கிருத மாலை' என்றும் இது வழங்கலாயிற்று. புண்ணிய நதிகளுள் இது ஒன்றாக விளங்கியது. 

9. எழுகடல் அழைத்த படலம்

நாட்டுக்கு அரசனாக உலகை ஆட்டுவிக்கும் இறைவன் இருந்து ஆட்சி செய்து வந்த நாளில் காட்டுக்குள் திரிந்து தவம்செய்த முனிவர்களும் தவசிகளும் சந்திக்க அங்கு வந்து கூடுவார் ஆயினர். வேதம் கற்ற முனிவன் ஆகிய கவுதமனும் அங்கு வந்து திரும்பும் வேளையில் காஞ்சன மாலையின் இல்லத்து வந்து அமர்ந்தார். அவளும் வரவேற்று முகமன் உரை வழங்கிப் பொன் ஆதனம் இட்டு அஞ்சலி செய்து அரிய தவத்தின் திறம் அறிந்து கொள்ளக் கேட்டாள். தவம் என்றால் என்ன? அதன் அவசியம் யாது? அதனால் உண்டாகும் பயன் யாது? என்று கேட்கத் தொடங்கினாள்.

"உலகீன்ற தடாதகைக்கு நீ தாயானாய்; சிவனுக்கு மருகன் என்னும் சீர் பெற்றாய்; மலையத்துவசனின் மனைவியாக இருந்து பெருமை பெற்றாய். நீ அறியாத தவ விரதங்கள் எவை இருக்கின்றன? என்றாலும் வேத நூலில் உள்ளதைச் சொல்கிறேன் என்று கூறினான்.