பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

திருவிளையாடற்புராணம்

வெள்ளை யானைக்கு ஏற்பட்ட இழிவையும் இறைவன் நீக்கினான் என்று கூறினான். அதற்கு வருணன் "என் வயிற்று நோயை அந்த வைகை நதிக்காவலன் தீர்த்து வைப்பானா" என்று கேட்டான்.

"பிறவி நோயைத் தீர்க்கும் பெருமான் ஆகிய அவனுக்கு வயிற்று நோயைத் தீர்ப்பது தானா முடியாது. அந்த வைத்தியநாதனை நீ சோதித்துப் பார்" என்றான்.

மிரட்டியே எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்த வருணன் தன் ஏழு மேகங்களையும் ஏவி மழைபெய்யச் செய்து கடல் அலையை விளித்துப் பொங்கி எழுமாறு ஆணையிட்டான். மதுரை கடல் நீரில் கலங்கியது; மக்கள் உயிருக்குத் தப்பி ஓட உறைவிடம் தேடினர். பாண்டியன் சோம சுந்தரக் கடவுளிடம் சென்று கடல்கள் செய்யும் இடர்களை எடுத்து உரைத்தான்; அஞ்சற்க என்று சொல்லித் தன் சடையில் மேகங்கள் நான்கினை அழைத்து "நீவிர் நால்வரும் கடல் அலையை உறிஞ்சி வற்றச் செய்வீர்” என்று ஆணையிட்டார்.

மெய்யன்பர்களின் எழுவகைப் பிறப்பையும் தீர்ப்பது போல ஏழுகடலில் நீர் முழுதும் வற்றும்படி செய்ய மறுபடியும் பாண்டிய நாடு பழைய நிலையை அடைந்தது. கடல்கோள் அங்குக் கால்கோள் கொள்ள முடியாமல் போயிற்று. இதெல்லாம் ஈசன் திருவிளையாடல் என்று அறிந்து உணர்ந்து மக்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.