பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

திருவிளையாடற்புராணம்

வேறுவழி இன்றிச் சிவனிடம்வந்து சரண் அடைந்தான். தன் ஆணவத்தால் அறிவு கெட்டு இந்த அவல நிலைக்கு ஆளானதை வருணன் உணர்ந்து வானத்து வீதியில் சென்று ஈசனைத் தரிசித்து மன்னிக்கும்படி வேண்டினான்.

இரக்கமே உருவான இறைவன் அவனை மன்னித்து "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார். தான் மிரட்டித் தன் வயிற்று நோயைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கருதி அதனால் ஏழு மேகங்களை விரட்டி இங்கு அனுப்பியதாக உரைத்தான். சூலை நோய் தந்து நாவுக்கரசரை ஆட்கொண்ட சிவபெருமான் வருணனின் வயிற்று நோயைத் தீர்த்துக் கொடுத்தார். ஆணவம் நீங்கி அடக்கம் மேற்கொண்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு ஏனைய மேகங்களை விடுவித்துக்கொண்டு தன் கடலை இருப்பிடமாக அடைந்தான். 

20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம்

அபிடேக பாண்டியனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் வேண்டிய பொருளைத் தருவதற்காக இறைவன் எல்லாம் வல்ல சித்தராக உருக்கொண்டு வந்தார். வட்டமாகிய மயிர்ச் சடையும், நீறு பூசிய நெற்றியும் குண்டலம் தரித்த செவியும், புலித் தோல் ஆடையும், காலில் சிலம்பும் பாதுகையும் கொண்டு புன்முறுவல் பூத்த முகத்தினராய் அங்காடித் தெருக்களும் மாளிகைச் சந்திப்புகளும் தேர் வீதிகளும் செல்வாராயினர். ஓர் இடத்திலேயும் தங்க இருப்புச் கொள்ளாமல் விருப்பப்படியே திரிந்து சென்றார்.

முதியவரை இளைஞர் ஆக்கினார். ஆடவரை மகளிர் ஆக்கினார்; மலடியைக் கருஉயிர்க்கச் செய்தார்; ஊமை, குருடு, செவிடு, முடம் இப்பிணிகளைத் தீர்த்து வைத்தார்;