திரு. வி. க. இ. 133
சமூகவியல்
இவற்றையடுத்து அந்நாளைய கல்வி நிலை, குடும்ப வாழ்க்கை, சமுதாய நிலை ஆகியவைபற்றிப் பேசிச் செல்கிறார். அடுத்து சமயநிலை பற்றிப் பேசும்போது கீழ்வருமாறு கூறுகிறார்: -
“அக்கால இந்தியர் பெரிதும் சமயத் தத்துவ உலகில் உழைத்து உழைத்துப் பலவகைத் தத்துவ நுட்பங்களை எற்றுக்கு உதவினர் என்று சிலர் கருதலாம். இந்திய முனிவரர் முக்கால ஞானிகள். கால தேச வர்த்தமானங்கள் என்றும் ஒரு தன்மை யானவாயிரா என்பதும் அவை மாறிமாறிச் சுழன்று கொண்டே போகும் இயல்பின என்பதும் பழங்கால முனிவரர்க்குத் தெரியும். கால தேச வர்த்தமானப் புயலில் அகப்பட்டுச் சுழலும் மக்கள் கூட்டத்துக்கு ஒவ்வொருபோது ஒவ்வொரு தத்துவம் உண்மைய தாகவும் பொருந்தியதாகவும் தோன்றும். மக்களின் அவ்வக் கால உணர்வுக்கு உணவாகும் முறையில் பழைய முனிவரரால் பலவகைத் தத்துவங்கள் சமைத்து வைக்கப்பட்டன. சார்வாகம் உள்ளிட்ட எல்லாக் கொள்கைகளும் உலகில் நிலவிக் கொண்டிருத்தல் வேண்டுமென்பது இறைவன் திருவுள்ளம். அத்திருவுள்ளக் குறிப்பையுணர்ந்து நடந்தவர் பழங்கால முனிவரர்.
முற்கால இந்தியர் சமய வாழ்வை வேறாகவும் உலக வாழ்வை வேறாகவும் தனித்தனியே பிரித்துக் கொண்டாரில்லை. அவர், இன்பப் பேற்றுக்கென்று உலகம் ஆண்டவனால் அளிக்கப்பெற்ற அருட் கொடை என்றே கருதி வாழ்வு நடாத்தினர். அற வழியில் நின்று, அறவழியில் பொருளிட்டி, அறவழியில் இன்பம் நுகர்ந்தால் விடுதலை தானே உண்டாகும்