24 அச. ஞானசம்பந்தன்
கருத்துகள் மோதினால் அவன் தன்னையே இழந்து திரியும் நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், திண்மை நிரம்பிய திரு. வி.க. இவை ஒவ்வொன்றிலும் உள்ள நலன்களை எடுத்துக் கொண்டாரேயன்றிப் பகையுணர்ச்சிக்கு இரையாகவில்லை. புதிய புதிய தொடர்புகள் ஏற்பட ஏற்பட அவருடைய அறிவும் மனமும் விரிவடைந்தன. உண்மை என்பது பன்னிறமுடைய பளிங்கு என்பதை உணரத் தொடங்கினார். ஏட்டுக் கல்வியால் ஓரளவு பண்பட்ட அவருடைய உள்ளம், மாறுபட்ட கருத்துடைய பலர் தொடர்பால் விரிவடைந்தது. தியாசாஃபிகல் கழகத்தின் தொடர்பால் யாண்டும் உண்மை இருத்தல் கூடும் என்ற உண்மையை உணர்ந்து, இயற்கையில் ஈடுபட்டு இறைவனைக் காணும் அளவு வரை சென்றது. தொண்டுள்ளம் உண்மையில் ஒருவற்குக் கைவர வேண்டு மாயின் எங்கும், எவற்றினிடத்தும் இறைவன் உளன் என்னும் எண்ணம் ஊறவேண்டும். இயற்கைபற்றி இதோ அறிஞர் பேசுகிறார்: .
“காவிய ஓவியங்களோடு பழகினேன். அவற்றில் படிந்தேன்; படிந்து படிந்து உழன்றேன்; பன்னெடுநாள் உழன்றேன்; உழல உழல அவை என்ன செய்கின்றன? நன்றி செய்கின்றன. எவ்வழியில் ? அவை தங்கள் முதலாகிய இயற்கைக் கருவூலத்தில் எளியேனைப் பிடர் பிடித்துத் தள்ளுகின்றன. என்றும் காணாத செல்வத்தை யான் காண்கிறேன். அங்கே கட்டில்லை; காவலில்லை; செல்வக் கடல்; கொள்ளக் கொள்ள வற்றாது; வரையாது. இயற்கை அன்னை தண்ணருள் பொழிகிறாள். அவள் கோலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவிய ஓவியமாகத் தோன்றுகிறது. ஞாயிறு, திங்கள், உடுக்கள், வானம், மலை, காடு, ஆறு, வயல், கடல், புழுபூச்சி, பறவை, விலங்கு, மகள், மகன், குழந்தை முதலிய யாவும் காவிய ஒவியங்களெனப் பொலிகின்றன. இயற்கையுலகே தொல் காப்பியமாகத்