118
திருமாளிகைப் பத்தியுடன் அமைத்தவன் இரண்டாங் குலோத்துங்கள். தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டாம் திருச்சுற்று, குலோத்துங்க சோழன் திருமாளிகை என வழங்கப்பெற்றது.
அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளைக் கொண்டு சிவனடியார்கள் அறுபத்து மூவர் வரலாறுகளையும் குறித்துத் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தைப் பாடும்படி செய்தவன் இரண்டாங் குலோத்துங்கனே என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் துணிபாகும். தில்லையம் பலவன் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்கத் திருத் தொண்டர் புராணத்தைப் பாடியருளிய சேக்கிழார் நாயனார் தம்மை ஆதரித்துப் போற்றிய சோழ மன்னனைப் பத்து இடங்களில் பாராட்டிப் போற்றியுள்ளார். அப்பாடல்களுள் அநபாயன் என்ற பெயரையே சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.
“சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத்திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு என்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்”
எனவரும் பாடலில் ‘தில்லைத் திருவெல்லை பொன்னின் 'மயமாக்கிய வளலர் போரேறு' எனச் சேக்கிழார் நாயனார் தில்லைப்பதியில் இவனுக்குள்ள பெரும்பற்றினைப் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.
திருநீற்றுச்சோழன்
தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடி இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளிவளரத் தில்லைப் பெருங்கோயிலிற் பலவகைத் திருப்பணிகளையும் ஆர்வமுடன் செய்து இத்திருக்கோயிலைப் பொன்மயமாக்கியவன் அநபாயன் இன்னும் சிறப்புப் பெயருடைய சோழ மன்னனாதலின் அவ்வேந்தர் பெருமானைச் சிவநெறிச் செல்வர் பலரும் திருநீற்றுச் சோழன் எனச் சிறப்பித்துப் போற்றுவாராயினர். தில்லையம்பலவாணர்பால் வைத்த பேரன்பின் திறத்தால் தில்லைப் பெருங்