பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

இது பற்றியே இவ்வேந்தன் "கோயில் பொன்வேய்ந்த பெருமாள்" எனப் போற்றப் பெற்றனன். இச்செய்தி,

"வாழ்க கோயில் பொன் வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே"

(தொகுதி IV 455)

எனத் திருப்புட்குழி திருமால் கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுப் பாடலாற் புலனாகும். இப்பாடலிற் "கோயில்" என்றது தில்லைப் பெருங் கோயிலையும், திருவரங்கம் பெரிய கோயிலையும். இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக்கோயில்களைப் பொன் வேய்ந்தமை பற்றிக் “கோயில் பொன் வேய்ந்த பெருமாள்” என இவன் போற்றப் பெற்றனன் எனத் தெரிகிறது. (கல்வெட்டு, ஆண்டறிக்கை 1936-37)

சினவரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட்
சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொற்றிருவை மணந்ததாக்கும் கனகத்துலையுடன் முத்துத்துலையிற் கலந்ததுவே.

(தொகுதி IV 620)

எனவரும் பாடல் இவன் தில்லையில் துலாபாரம் புக்க செய்தியை யுணர்த்தும். இவனது பதினோராம் ஆட்சியாண்டில் நந்தவனத்துக்குரிய வரி நீக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் திருத்தோப்பு, சுந்தர பாண்டியன் தெற்குத் திருவீதி இவற்றின் வளர்ச்சிக்காகவும் குடிகள் வாழ்வுக்காகவும் நிலம் அளித்துள்ளான். (S. 1. 1. 546-18) திருமூலட்டானமுடையார்க்குத் திருவுருத்திரம் அத்தியயனம் பண்ண நிலம் அளித்துள்ளான் (A.R. Vol. VI 631). இவனது ஆட்சிக் காலத்தில் 1253 முதல் 1268 வரை சோழநாடு நடுநாடு தொண்டை நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாயிருந்து ஆண்டவன் சடையவர்மன் வீரபாண்டியன் ஆவான். இவன் பல்லவ அரசனாகிய இரண்டாங் கோப்பெருஞ் சிங்கனிடம் திறை கொண்டு தில்லையில் - வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டான். இச்செய்தி