பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164



விடையில்வந்த செம்பொன் அம் பலத்தான் அந்த
வெள்ளியம் பலத்திலே விரும்பிச் சென்ற
நடையில் வந்த வருடமோ சர்வ தாரி
நாயபமார் கழியிருபத் தைந்து நாளாம்
கடையில்வந்த வருடங்கார்த் திகையீ ரேழு
கதிர்வாரம் திரும்பவந்து கலந்த நாளாம்
இடையில்வந்த வருடமெண்ணிப் பார்க்கில் முப்பத்
தேழுபத்து மாதநாள் இருப தாமே!


எனவரும் பாடல் அமைந்துள்ளது. சிதம்பரம் பொன்னம்பலத்து எழுந்தருளிய நடராசப்பெருமான் சர்வதாரி வருடம் மார்கழி 25 முதல் அட்சய வருடம் கார்த்திகை பதினான்கு வரை (கி.பி 24.12.1648 முதல் 14.11.1686 முடிய) 37 ஆண்டுகளும் 10 மாதங்களும் 20 நாட்களும் கூடிய காலப்பகுதியில் தில்லையில் இல்லாமல் பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டாரெனவும், அங்குக் குடுமியான் மலையில் 40 மாதங்களும் பின்னர் மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்து பின்னர் தில்லைக்கு எழுந்தருளினார் என்பதும் இப்பாடலால் அறிகின்றோம். 46 ஆம் எண்ணுள்ள செப்பேட்டில் பின்வரையப் பெற்ற தமிழ்ப்பாடலில் இச்செய்தி இன்னும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. சகாப்தம் 1606 இரத்தாட்சி வருடம் கோபால பிருத்வி சுரபதியினுடைய வேண்டுகோளுக்கிணங்க சாம்போசி மன்னர் தில்லைக் கோயிலைப் புதுப்பித்து, சிற்சபைக்குப் பொன் வேய்ந்து செப்பேடு அளித்தார் என்று செய்தி வட மொழிப் பத்தியில் குறிக்கப்பெற்றுள்ளது.

மருவிய சகாத்தமா யிரமுமஐ நூறறெழுப
துக்குமேற் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம் பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையி னாற்பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதிமின்
னெட்டான அட்சய வருஷமும்