பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கொண்டு விளங்குதலின் அம்முதல்வனுக்கு அட்டமூர்த்தி என்பது பெயராயிற்று.

அட்டபுட்பம்

இறைவனை அருச்சனை செய்தற்குரியன எண் மலர்கள். அவை: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை. இவை புறத்தே அருச்சனை புரிதற்குரிய மலர்கள். கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எட்டும் நம் அகப்பூசைக்குரிய மலர்களாகும். இவற்றை 'நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டு' என்பர் திருநாவுக்கரசர்.

நால்வகைநெறி

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.

சரியை - இறைவனை வழிபடுவோர் திருக்கோயிலை அலகிடல், மெழுகிடல், பூமாலை தொடுத்தல் முதலாகச் செய்யும் புறத்தொழில்கள்.

கிரியை - சிவபெருமானை நீராட்டி மலர் தூவி வழி படுதலாகிய அகத்தொழில்.

யோகம் - அருவத்திருமேனியை நோக்கிய நிலையில் மனத்தை ஒரு வழிப்படட நிறுத்தி அகத்தே செய்யும் வழிபாடு.

ஞானம் - அகத்தும் புறத்தும் ஆக எங்கும் நிறைந்த உண்மை அறிவு இன்பவுருவாகிய இறைவனை அறிவுத் தொழிலால் செய்யும் வழிபாடு.

சைவசமய குரவர் நால்வர்

திருஞான சம்பந்தர்: சீகாழிப்பதியில் தோன்றி, மூவாண்டில் உமையம்மையார் அளித்த ஞானப்பாலைப் பருகித் 'தோடுடைய செவியன்' முதலாகவுள்ள தேவாரப் பதிகங்களைப் பாடித் திருநல்லூர்த் திருமணத்தில் வைகாசி மூலத்தில் முத்திபெற்றவர், இவருக்கு வயது 16.