பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

திருநாவுக்கரசர்: திருவாமூரில் தோன்றிச் சமணசமயத்தினைச் சார்ந்து வயிற்றுவலியால் வருந்தித் தமக்கையார் திலகவதியார் அருளால் திருவதிகை வீரட்டானத்துப் பெருமானை வழிபட்டுக் *கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்பது முதலாகவுள்ள தேவாரப்பதிகங்களைப் பாடித் திருப்புகலூரில் சித்திரைச்சதயநாளில் முத்திபெற்றவர். வயது 81.

சுந்தரர்: திருநாவலூரில் தோன்றித் திருமணக்காலத்தில் வெண்ணெய்நல்லூர் அருட்டுறை யிறைவரால் தடுத்தாட் கொள்ளப்பெற்றுப் 'பித்தா பிறைசூடி' முதலிய தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிச் சேரமான் பெருமாளுடன் ஆடிச் சுவாதியில் திருக்கயிலாயத்தையடைந்தார். வயது 18.

மாணிக்கவாசகர்: திருவாதவூரில் தோன்றிப் பாண்டியனுக்கு அமைச்சராகித் திருப்பெருந்துறையில் இறைவனே குருவாக எழுந்தருளி உபதேசிக்கப் பெற்று 'நமச்சிவாய வாழ்க' என்பது முதலிய திருவாசகப்பனுவலைப் பாடிப் போற்றித் தில்லையில் ஊமைப் பெண்ணைப் பேசச்செய்து இறைவனே கேட்டு எழுதிக் கொள்ளும்படி திருக்கோவையாரைப்பாடியவர். அந்நூற்கு அன்பர்கள் பொருள் கேட்டபோது திருவாசகத்திற்குப் பொருளாவான் தில்லையம்பலவாணனே எனக்காட்டி ஆனிமகத்தில் தில்லைப் பெருமானுடன் இரண்டறக்கலந்தவர். வயது 32.

சைவத்திருமுறைகள் பன்னிரண்டு

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகங்கள் 1, 2, 3 திருமுறைகள், திருநாவுக்கரசர் அருளியவை 4,5,6 திருமுறைகள், சுந்தரர் அருளியது 7-ஆம் திருமுறை, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருக்கோவையார் எட்டாம் திருமுறை. திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை. திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. திருவாலவாயிறைவார் பாடிய திருமுகப் பாசுரம் முதல் நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை ஈறாகவுள்ள நாற்பது பிரபந்தங்கள் அடங்கிய தொகுதி - பதினோராம் திருமுறை. சேக்கிழார் நாயனார் பாடியருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை.