பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
இரண்டாம் பதிப்புரை

‘தில்லைப் பெருங்கோயில் வரலாறு' மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். காரணம், அது தலபுராணச்செய்திகளுடன் வரலாற்று உண்மைகளையும் மற்றும் இலக்கியச் செய்திகளையும் தெரிவிப்பதே.

இதுபோன்ற நூல் ஒன்றினை, மலிவான விலையில் தயாரித்து, அதனைத் தமிழ் மக்கள் அனைவரும் படித்துப்பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர், தில்லைத் தமிழ் மன்றத் தலைவரும், தில்லைப்பெருங்கோயில் திருப்பணிக் குழுவின் செயலாளராக விளங்கிய திருப்பணிச் செல்வர் திரு ஜி. வாகீசம்பிள்ளை அவர்கள். கோயிலின் குடமுழுக்கை 11--2--87ல் பலரும் போற்ற நிகழ்த்திய அவர்கள், எண்ணிய எண்ணியாங்கு எய்தி குடமுழுக்கு விழாவின்போது. இந்நூலை வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

இந்நூல் எழுதும் பொறுப்பை தமிழ் மூதறிஞர், பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் அவர்களிடம் மன்றத் தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்கள், என்றும் போற்றத்தக்க வகையில் எவ்வித கைம்மாறும். கருதாது, தமிழுக்கும், சைவத்துக்கும் அளப்பரிய தொண்டுகள் செய்த பேராசிரியர் அவர்கள் தாம் ஏற்ற பொறுப்பை தம் உடல்நிலையைக் கூடக்கருதாது, மிகச் செம்மையாகச் செய்து முடித்தார்கள். முதற்பதிப்பு முடியுந் தறுவாயில், அதனை மேலும் செம்மைப்படுத்தி, இரண்டாவது பதிப்புக்காக. அச்சுக்குக் கொடுக்கும் நிலையில், நூலாசிரியர் சிவப்பேறுபெற்றார்.


மன்றத்தலைவர் அமரர் ஜி. வாகீசம்பிள்ளை மற்றும் நூலாசிரியர் அமரர் க. வெள்ளைவாரணனார் செய்த பணிகளைத் தொடர மன்றம் முடிவு செய்தது. அதற்கேற்ப இரண்டாம் பதிப்பு வெளியாகிறது.

iv