பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப்பெருமானை வழிபட்டு மகிழ்ந்தாள் என்பது,

“இன்னம்பலபல யோனியில் எய்தா நெறி பெறவே
முன்னம்பலர் அடிதேடவும் முடிதேடவும் எட்டா
அன்னம் பல பயில்வார் புனல் அணிதில்லையுள் ஆடும்
பொன்னம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்”

என வரும் வில்லிபுத்தூராழ்வார் பாடலால் இனிது விளங்கும்.

திருமூலநாயனார்

தில்லை மன்றுள் இறைவன் ஆட்டியருளும் இத்திருக்கூத்தினை மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் ஆகியோருடன் கண்டு தொழுதவர் திருமுறை யாசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட வரும் சிறந்த சிவயோகியாருமாகிய திருமூல நாயனாராவர். இச்செய்தி,

"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே”
(திருமந்திரம்-67)

எனவும்,

“செப்புஞ் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள் பெற்றுத்
தப்பிலா மன்றிற் றனிக்கூத்துக் கண்ட பின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே"
(திருமந்திரம்-74)

எனவும் வரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு விளங்கும். தில்லைப் பெருமான் வியாக்கிரபாத முனிவருடைய குழந்தை பாலில்லாது அழுதபோது பாற்கடலையே வருவித்துக் குழந்தையின் பசி தீர்த்தருளினார். இச்செய்தி, ‘பாலுக்குப்பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடலீந்தபிரான்' எனவரும் திருப்பல்லாண்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.