பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61



"தோற்றந் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம், முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண்மை -35)

எனவரும் உண்மை விளக்க வெண்பாவாகும்.

மன்னுயிர்களின் சித்தத்தில் எழுந்தருளிய இறைவன் ஐம் பெரும் பூதங்கள், அவற்றிடமாகப் பொருள்களை அறியும் வாயிலாகிய ஐம்பொறிகள், அவற்றின் வழி நிகழும் புலனுணர்வுகள், வேதப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்து, வேதத்தின் மிக்க சிவாகமங்கள், கலைகள் காலம் ஊழி கலை அண்டங்களின் இயக்கம் ஆகிய எல்லாவற்றிலும் வேறறக் கலந்து நின்று திருக்கூத்து நிகழ்த்தியருளும் திறத்தினை,



"பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம்தன்னில்
ஒதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடும் சித்தனே" (2730)

எனவரும் திருமந்திரம் விரித்துரைக்கின்றது. புணர்தல் - வேறறக்கலத்தல்.



"பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்த விளங்கு தில்லை கண்டேனே"

(கண்ட பத்து -10)


எனவரும் திருவாசகம், மேற்குறித்த திருமந்திரத்தை அடி யொற்றியமைந்துள்ளமை காணலாம்.



அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற்
கண்டங் கரியான் கருணை திருவுருக்
கொண்டங் குமை காணக் கூத்துகந் தானே” (2732)