பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

முறையில் தாண்டகவேந்தர் அருளிய திருப்பதிகம் 'மங்குல் மதி தவழும்' எனத் தொடங்கும் புக்க திருத்தாண்டகமாகும்.

"காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங் கையேந்திக் கங்காளராய்
ஊராரிடுபிச்சை கொண்டு ழலும்
உத்தமராய் நின்ற ஒருவனார் தாம்
சீரார் கழல் வணங்கும் தேவதேவர்
திருவாரூர்த் திரு மூலட்டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ்சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே" (6--2-5)

என வரும் புக்க திருத்தாண்டகப்பாடல், திருவாரூர் முதலிய திருத்தலங்கள் எல்லாவற்றிலும் கோயில் கொண்டெழுந்தருளிய இறைவன் தில்லைச் சிற்றம் பலத்திலே, புகுந்து நள்ளிரவில் நட்டம் பயின்றாடுத்திறத்தினைப் புலப்படுத்தல் காணலாம். இறைவனுடைய எல்லாக்கலைகளும் நள்ளிரவில் தில்லையம்பலத்தில் ஒடுங்க இறைவன் ஆடல்புரிந்தருளுதல் பற்றியே தில்லைப்பெருங்கோயிலில் அர்த்தயாம வழிபாடு மிகவும் சிறப்புடையதாகப் போற்றப் பெற்று வருகின்றது.

சுந்தரர்

நம்பியாரூரராகிய சுந்தரர், தில்லைப்பதியை யடைந்து இறைவனது திருக்கூத்தினைக் கண்டு வணங்கி மனிதப்பிறவியே அடியேற்கு வாலிதாம் இன்பத்தை வழங்கியது எனக் கண்களில் நீர் சொரியக் கசிந்து அறிவரும் பதிகமாகிய சொன்மாலையாற் பரவிப் போற்றினார். சுந்தரர் கொங்கு நாட்டிற் பாண்டிக் கொடுமுடி முதலிய தலங்களைப் பணிந்து காஞ்சியாற்றின் கரையிலுள்ள பேருர்த் திருக்கோயிலை யடைந்தபோது, பேருர்ப் பெருமான் தில்லை மன்றுள் நின்றாடுந் தமது திருக்கோலத்துடன் காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியைக்கண்ட சுந்தரர், 'தில்லையம்பலவன் திருக்கூத்தினைக் கண்டு கும்பிடப் பெற்றால் இனிப் புறம்போய்ப் பெறுதற்கு, யாதுளது' என்று கூறிப் பேரூரினின்றும் புறப்பட்டுப் பல தலங்களையும் பாடிப்