பக்கம்:தீபம் யுகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேள்வியாக நடத்திய, தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ள 'தீபம்' பத்திரிகையின் வரலாற்றை எழுதி அச்சிடுவதே நா.பா.வுக்கும் தீபத்துக்கும் உரிய நினைவுச் சின்னமாக அமையும் என்று தி.க.சிவசங்கரன் நண்பருக்கு யோசனை சொன்னார். அத்துடன் தீபம் வரலாற்றை எழுத வல்லிக்கண்ணனே ஏற்றவர் எனறும், இவ்வரலாற்றுக்கு 'தீபம் யுகம்' என்று பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் தி.க.சி. தெரிவித்துள்ளார்.

அந்த யோசனையை மகிழ்ச்சியுடன ஏற்றுக்கொண்ட நண்பர் பாலகிருஷ்ணன் 'தீபம்' வரலாற்றை எழுதும் பொறுப்பை எனக்கு அளித்தார்.

என்னிடம் சகோதர அன்பும், மிகுந்த நட்பு உணர்வும் கொண்டிருந்தவர் நா.பா. என் இஷ்டம் போல் சுதந்திரமாக எழுதுவதற்கு தீபத்தின் பக்கங்களை தாராளமாக ஒதுக்கிவைத்தார் அவர். அவருடைய துண்டுதலும், தீபத்தின் துணையும் இல்லாதிருந்தால், சரஸ்வதி காலம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை, தமிழில் சிறு பத்திரிகைகள் ஆகியவற்றை நான் எழுதியிருக்கமாட்டேன். இவை எனக்கு மிகுந்த கவனிப்பைப் பெற்றுத்தந்தன. இவற்றால் தீபமும் சிறப்பு அடைந்தது.

நான் நன்றியுடன் இதை பல்வேறு சமயங்களில் பல இடங்களில் கூறிவந்திருக்கிறேன். நா.பா.வுக்கும் தீபத்துக்கும் என் நன்றியை நன்கு வெளிப்படுத்த வரலாறு எழுதும் வாய்ப்பு எனக்குப் பெரிதும் உதவியுள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த பாலகிருஷ்ணனுக்கும், யோசனை கூறிய தி.க.சி.க்கும் என் அன்பு வணக்கம்.

வல்லிக்கண்ணன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/6&oldid=1111278" இலிருந்து மீள்விக்கப்பட்டது