பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூக்காரி



மாமதுரைச் சிலையழகில்
வடித்தெடுத்த நாசிமலர்;
தேமதுரக் கிண்ணியெனச்
சிரித்தவாய்; செவ்விதழ்கள்:

பொற்கலைஞர் கைத்தொழில்கள்
புகுந்தறியா நற்செவிகள் ;
விற்புருவம் தான் வளைத்து
விழியம்பு பாய்ச்சி வந்தாள்.

வானத்திலே தோன்றும்
மணிவில்லும் கீழிறங்கி
மானிலத்து நடந்ததுவோ?
வடிவுகொண்ட பேரெழிலோ ?

சேரன் திருநாட்டுச்
செல்வியரின் பொன்னிறத்தாள்
மாரனுக்கு வாய்த்த புது
வாளியெனத் தானசைந்தாள்.

செந்தாழம் பூமேனி
சேர்ந்தபெரும் பாக்கியத்தால்
கந்தைக்கும் ஓரழகு
கன்னியவள் தான் கொடுத்தாள்.

முல்லைப்பூ என்ற சொல்லால்
மோடி வித்தை உச்சரித்து
ஒல்லையிலென் னுளம்பற்றி
ஓடி மறைந்து விட்டாள்.

31