பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருணை

மனநிறைவு எனக்கேது ?
என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய்
அதுவே நின் திருவுள்ளம்
இயற்கையின் எழில் நடனத்திலே
குபேரப் பெருஞ் செல்வக் களிமயக்கிலே
பட்டம் பதவி மாயச் செருக்கிலே
கலையாம் இன்பத் தேன் வாரியிலே
கன்னி மதுப் பேரழகினிலே
குழந்தைத் தண்ணமுதச் சிரிப்பினிலே
புகழ் என்னும் போதையிலே
ஏதெனக்கு மன நிறைவு ?
என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய்
உள்ள மங்கே ஒன்றி ஊன்றவில்லை
ஏக்கம் ஏக்கம் ஒரே ஏக்கம்
எதற்கோ ஏங்கித் தவிக்கிறது என் ஆன்மா
என்னை நீ அவ்வாறு படைத்துள்ளாய்
அதுவே நின் திருவுள்ளம் ; அதுவே நின்
                                    குறிக்கோள்
இறைவா,நின் கருணைதான் என்னே !

                                                                                                                                                                    309