பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வெற்றி முரசம்!

இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த சில வாரங்களாக மிகுந்த பரபரப்பை உண்டாக்கி விட்டிருந்த மூன்றாவது பொதுத்தேர்தல் முடிந்து, ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி, அனைவரும் எதிர்பார்த்தபடி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி பாரதத் திருநாட்டில் வாழுகின்ற நாற்பது கோடி மக்களின் வெற்றி, ஜன நாயகத்தின் வெற்றி. ஆம்; தங்களை ஆளும் காங்கிரஸ் கட்சியின்பால் இந்தியப் பொதுமக்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தையும் தம்பிக்கையையும் உலக நாடுகள் அனைத்தும் உய்த்துணர மீண்டும் ஒரு வாய்ப்பு உண்டாகியிருக்கின்றது. இதன் மூலம், இந்தியாவின் பெருமை உலக நாடுகளின் மத்தியில் மென்மேலும் சிறந்து விளங்கும்!

ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகாலமாக அடிமை வாழ்வு அகன்றிடாமல் வெள்ளையரின் ஆட்சிக்கு உட்பட்டுக்கிடந்த பாரததேசத்தை விடுதலை செய்ய மாபெரும் போராட்டம் நடந்தது! இந்த விடுதலை வேள்வியில் உடல், பொருள், ஆவி அனைத்தையுமே சர்வபரித்தியாகம் செய்ய வல்ல தேசத்தலைவர்கள் பலர் தோன்றினார்கள். மதிப்புக்குரிய அண்ணல் காந்தியடிகளின் மதிப்பிடற்கரிய தியாகப் பண்புகளால் உருவாகிப் பக்குவம் பெற்றார்கள் அத்தலைவர்கள், சுதந்திரப் போராட்டம் பல கட்டங்களில் உச்ச நிலை எய்தி, இறுதியில் வெற்றி பெற்றது. நம் தாய்த்திரு நாடு விடுதலை பெற்றது. நாம் விடுதலை பெற்றோம், இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட- புனிதமிகு சரித்திரச் சிறப்பை உடைய காங்கிரஸ் மகா சபையின் வெற்றியில் பாரதமக்கள் அனைவருக்குமே பங்கு