பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அரசு கண்ட இளவரசன்

10

மாயாதேவியை மக்கள் பலர் கூடி பய பக்தியோடு வணங்குவதென்றால் அதன் பொருள் என்ன? மாயாதேவி மிக உயர்ந்த நிலையை அடையப் போகிறாள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மாயாதேவி இப்போது தான் பேரரசியாக இருக்கிறாளே! இதற்குமேல் ஒருநிலை அவளுக்கு எங்கே வரப்போகிறது?

சுத்தோதனர் நினைத்து நினைத்துப் பார்த்தார். அவர் அறிவுக்கு எதுவும் எட்டவில்லை. இந்தக் கனவின் பொருள் தெரியவேண்டும் என்றால், கற்ற பேரறிஞர்களையும் அனுபவத்தால் முதிர்ந்த பெரியார்களையும் அறிஞர்களையும் கேட்டுப் பார்த்தால்தான் ஆகும்.

நாட்டில் உள்ள சான்றோர்களையும் அறிஞர்களையும் பெரியவர்களையும் அவையிலே கூட்டினார் சுத்தோதனர். யாருக்கும் இந்தக் கனவின் பொருள் புரியவில்லை. ஒரு சிலர் சொன்ன பொருள் சரியென்று படவில்லை. அர்த்தமில்லாத கனவாகவே அது போய்விடும் போலிருந்தது.

கூட்டத்தின் இடையிலிருந்து ஒரு கிழவர் எழுந்து அரசர் முன்னே வந்து நின்றார். அரசியை நோக்கி அவர் பேசினார்.