பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

46

நயமாகப்பேசித்தடுக்க வேண்டியதே இவர்கள் வேலையாக இருந்தது.

நெடுநாட்கள் வரை சித்தார்த்தன் வெளிக் கிளம்பவேயில்லை. பின்னர் ஒரு முறை தேரில் ஏறிக் கேளிக்கை மைதானம் நோக்கிப் புறப்பட்டான். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வீதியின் ஓரத்தில் ஒரு கிழவன் படுத்திருப்பதைக் கண்டான். அந்தக் கிழவனின் உடல் உப்பிப் போயிருந்தது. வலி தாங்காமல் அவன் முக்சி முனகிக் கொண்டிருந்தான். அவன் படும் வாதனையைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் சித்தார்த்தன் தேரிலிருந்து கீழே குதித்தோடினான். அவனுக்கு ஏதாவது உதவி செய்து எப்படியாவது அவனுடைய துன்பத்தைத் தணிக்கவேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. ஒருவர் உடற் பிணியினால் வருந்தும்போது, இன்னொருவர் அவருக்கு எப்படி உதவி செய்யமுடியும்? சித்தார்த்தன் தன் தேர்ப்பாகனை நோக்கி, “சாணா, இந்த மனிதன் ஏன் இப்படி வீதியோரத்தில் படுத்துத் துடித்துக் கொண்டிருக்கிறான்?” என்று கேட்டான்.