பக்கம்:தேன்பாகு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


"ஐயர் பசிக்கிறது; கொஞ்சம் சோறு போடுங்கள்" என்றான். அந்தச் செல்வர், "உன்னைப் பார்த்தால் கொட்டாப்புளி மாதிரி இருக்கிறாய். எங்கேயாவது வேலை செய்து பிழைக்கக் கூடாதா? உனக்கு வெட்கமாக இல்லை; இங்கே சோறும் இல்லை; ஒன்றும் இல்லை போ” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அரசன் மற்றொரு செல்வர் வீட்டுக்குப் போய்ச் சோறு கேட்டான். அவரோ, "இது சத்திரமா, கண்டவர்களுக்கெல்லாம் சோறு போட போடா வெளியே' என்று துரத்தி விட்டார்.

அரசன் மூன்றாவது வீடு ஒன்றுக்குப் போனான். அவன் பிச்சை கேட்க வருகிறான் என்று எண்ணி அவனைக் கண்டவுடன் வாயிற் கதவைச் சாத்தி விட்டார்கள்.

அரசனுக்கு இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது, 'வாய் கிழியப் பேசினவர்கள் இப்படி இருக்கிறார்களே!' என்று வருந்தினான்.

பிறகு வேறு எங்காவது போகலாம் என்று கடந்து போய்க் கொண்டிருக்கையில் ஒரு கூலியாள் தான் கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்று மூட்டையை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அங்கே சென்ற அரசன், "ஐயா, மிகவும் பசியாக இருக்கிறது, கொஞ்சம் சோறு போடுங்கள்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/43&oldid=1338647" இலிருந்து மீள்விக்கப்பட்டது