முன்னுரை
முன்பே நான் இரண்டு கட்டுரைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறேன். அவற்றிற்கும் இந்தத் தொகுதிக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. அதைப்பற்றிக் குறிப்பாக இரண்டொரு வார்த்தைகள் சொல்லவே இந்த முன்னுரையை எழுதுகிறேன்.
வண்ணத்திலும், மணத்திலும் மாறுபட்ட பல மலர்களைக் கொண்டு ஒரு மாலை தொடுக்கலாம்; ஒரே வகையான மலர்களாலேயும் தொடுக்கலாம். பூவின் சிரிப்பு, காட்டு வழிதனிலே என்ற எனது கட்டுரைத் தொகுதிகள் முதலிற் குறிப்பிட்ட மாலையைப் போன்றவை. 'பலசரக்குக்' கொண்டவை, ஒரே உள்ளத்தின் எண்ணச் சித்திரங்கள் என்றாலும் பொருள்கள் வேறு வேறானவை.அவற்றிற்குள்ளே தொடர்பிருக்க வேண்டுமென்ற எண்ணம் அங்கே இல்லை.
தேன் சிட்டு வெவ்வேறு வகையான மலர்களை நாடுகின்றது என்பது மெய்தான்; ஆனால் அதன் அடிப்படை நோக்கம் ஒன்றே என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.
தேன் சிட்டுத் தொகுதியிலும் அந்த அடிப்படை ஒருமையைக் காணலாம். வெவ்வேறு கோணங்களிலிருந்து கட்டுரைச் சித்திரங்களைத் தீட்டியிருந்தாலும் அவற்றிற்கு உட்கிடையாக உள்ளது ஒரே பொருள்தான்.