பக்கம்:தேன் சிட்டு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தேன் சிட்டு


பிறருடைய நலத்திற்காக எவ்விதமான துன்பத்தையும் பொருட்படுத்தாமல் துணிந்து சேவை செய்தவர்கள், தம்மையே தியாகஞ் செய்தவர்கள், உயர்ந்த உண்மைகளை எடுத்துக் கூறியவர்கள் ஆகியோர் காட்டிய வீரத்திற்கு இணையானது வேறொன்றுமில்லை என்பதை இன்று நாம் சிறப்பாக எடுத்துக்காட்ட வேண்டும். 'உயிரைக் கொல்வது யாருக்கும் சாத்தியமாகும்; ஆனால் ஒர் உயிரைச் செழிக்கச் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதைச் செய்பவனே உயர்ந்தவன்’ என்ற புத்தர் அருள்வாக்கு மேலோங்கி முழங்க வேண்டும். போர் முரசைக் கொட்டி மக்களின் விலங்குனர்ச்சியை எழுப்புவது இன்றும் எளிதாகவே உள்ளது. அன்புணர்ச்சியை எழுப்புவது அவ்வளவு எளிதாக இன்று தோன்றவில்லை. ஆனால் அதைச் செய்வதுதான் சிறப்பு: அன்புணர்ச்சி மேலோங்கி நின்ற காலத்தில் மக்கள் எவ்வளவு உயர்ந்த தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அந்த மென்மை உணர்ச்சியே நிலைத்து நின்று ஆட்சி புரியச் செய்வது தான் இன்று நாம் செய்யவேண்டிய புனிதமான சேவையாகும்.

அதற்கு நான் மேலே காட்டியதுபோல நமது சமயமும் தத்துவமும் வலிமை தருகின்றன.

அந்த வலிமையிலிருந்தே, 'தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்' என்று பாடக்கூடிய துணிவு பிறக்கின்றது.

மெய்யுணர்வானது எவ்வாறு ஒருவனுக்குப் பிறக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு இராம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/71&oldid=1155057" இலிருந்து மீள்விக்கப்பட்டது