விழா நடைமுறைகள்
தைத் திங்களில் பொங்கல் விழா நடைபெறுவதாலேயே, அத்திங்களை இன்றியமையாத திங்களாக இலக்கியங்கள் கூறலாயின. எனவே, பொங்கல் விழாவின் நடைமுறையினைக் காண்போம்:
பொங்கல் மாசம்:
தைத்திங்கள் என்னும் செய்யுள் வழக்காற்றைப் 'பொங்கல் மாசம்'எனப் பெண்கள் கூறுவது மரபு. எங்கள் பாட்டி காலத்திலிருந்து நான் கேட்டு வருகிறேன்; மார்கழி பிறந்ததுமே, "பொங்கல் மாசம் வந்துவிட்டது; இனிப் பொங்கல் வேலையைக் கவனிக்கச் சரியாயிருக்கும்; அந்த வேலையைப் பார்ப்பதா இந்த வேலையைப் பார்ப்பதா? நான் எந்த வேலையென்று கவனிப்பேன்;பொங்கல் வேலைகள் எல்லாம் அப்படியேகிடக்கின்றன. இனி ஒவ்வொன்றாய்க் கவனித்து முடித்தாக வேண்டும்"-என்று பெண்கள் கூறுவதை யான் இளமையிலிருந்தே கேட்டுவருகிறேன். இக்காலத்தும் மார்கழி பிறந்ததுமே இவ்வாறு என் மனைவி கூறுவதைக் கேட்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் 'தைத்திங்கள்' என்னும் தண்ணிய பெயரால் புலவர்கள் வழங்கியதை,