1. கச்சிக் கார்மேனி அருளாளர்
முத்தித் தரும் ஏழு நகர்களுள் ‘காஞ்சி’ என்று வழங்கப் பெறும் காஞ்சிபுரம் முக்கியமானது.[1] இதனை வேதாந்த தேசிகர்,
காசிமுத லாகிய நன் னகரி யெல்லாம்
கார்மேனி அருளாளர் கச்சிக் கொவ்வா[2]
என்று புகழ்வர். திருக்கோயில்கள் நிறைந்த ஊர்; வரலாற்றுப் புகழ் பெற்றது. இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டே பல்லவர்கள் பல்லாண்டுகள் ஆட்சி புரிந்து வந்தனர். அருளாளர் கச்சி என்று அன்பாக ஆண்டவனின் பெயரைச் சேர்ந்தே தேசிகர் புகழ்வதைப் போலவே, ஏழை ஏதலர்களின் தூய மனத்தில் “கஞ்சி வரதப்பன்’ நிலைத்து வாழ்கின்றான், வரதப்பனுடன் ஊரும் சேர்ந்து வாழ்கின்றது. ‘கஞ்சி வரதப்பா!’ என்றால், ‘எங்கு வருதப்பா?’ என்று கேட்கும் சொற்றெடர்கள் நாம் கேட்டுப் பழகியவை அன்றோ? காசி நகர் சந்துகளுக்குப் பெயர்போனது! காஞ்சியோ அகன்ற தெருக்களைக் கொண்டது; அக்காலத்தில் நகர் அமைப்புப் பொறிஞர் மிக அழகாகத் திட்டமிட்டு அமைத்துள்ளார். மாதவச் சிவஞான யோகிகள் இந்த ஊரின் அழகினைச் சமத்காரமாகப் போற்றியுள்ளார்.
“கச்சிமா நகர் ஓர் தட்டும்
கடவுளர் உலகோல் தட்டும்
வைச்சுமுன் அயனார் தூக்க
மற்றது மீது செல்ல
நிச்சயம் முறுகிக் தாழ்த்து
நிலமிசை விழும் இவ் ஆரை
இச்சகத் துர்களோடு
எண்ணுதல் மடமைப் பாற்றே”[3]