பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

34



உடற்பயிற்சி செய்கின்றவர்களும் விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றவர்களும் உடற் பயிற்சியையோ விளையாட்டையோ விட்டு விட்டால், தொந்தி வந்துவிடுகிறது. அதனால் தான் நாங்கள் உடற்பயிற்சி செய்வதோ விளையாடுவதோ இல்லை என்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அதை நம்புவோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

உடற் பயிற்சி செய்யும் பொழுதும் சரி, விளையாடுகின்ற காலங்களிலும் சரி, அவர்களின் உடலியக்கம் அதிகமாகிறது என்பது யாவரும் அறிந்ததே. அந்த இயக்கத்தின்போது அழிந்து போன தசைத் திசுக்களையும், இழந்து போன சக்தியையும் மீட்டுக்கொள்ள வேண்டியதற்காக தேவையான அதிக அளவு உணவினை உண்கின்றார்கள். நிம்மதியாக உறங்குகின்றார்கள். அதன் காரணமாக உடல் தெளிவாகவும் பொலிவாகவும் விளங்குகின்றது.

உடற்பயிற்சியை விட்டு விட்ட பிறகு, விளையாட்டை விட்டு ஒதுங்கி விட்டதற்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செய்த வேலையை அதாவது ஒழுங்காக செய்து வந்த பயிற்சியையும் விளையாட்டையும் விட்டு விட்ட பிறகு, அவர்கள் மனதில் தாங்கள் பெரிய வீரர்கள் என்ற எண்ணம் தான் ஓங்கியிருக்கிறது.

அதன் காரணமாக, நமது உடல் எதையும் தாங்கும் என்ற தைரியத்தில் உணவு வகையில், உடல் உறவு வகையில், நடைமுறையில் அனைத்திலும் இயற்கைக்குப் புறம்பான முறைகளில் ஈடுபடுகின்றார்கள், வாழ்கின்றார்கள்.