பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தொல்காப்பியம்-நன்னூல்



   இதனால் விள முதலிய உயிர்மெய்யிறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சி பெறுவன வாயின. வரகு என்புழி இடை நின்ற ரகர உயிர்மெய் அகரமாய் உயிர்த் தொடர்மொழி யெனப்பட்டது. எனவே ஒற்றுமை நயத்தான் ஒன்றென வழங்கும் உயிர்மெய்யெழுத்தினை வேற்றுமை நயத்தால் மொழிகளின் ஈறும் இடையும் உயிரென ஒரெழுத்தாயும், முதலில்மெய்யென ஒரெழுத்தாயும் ஆசிரியர் பிரித்துரைத்தமை நன்கு பெறப்படும்.
   முன்னர், “மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே” நூன்-13 என்றது, உயிர்மெய்யாகிய தனியெழுத்திற்குக் கூறியது. ஈண்டு உயிர்மெய்யீறும் உயிரீற்றியற்றே என்றது, மொழியிறுதி நின்ற உயிர்மெய்யெழுத்திற்குக் கூறியது. ஆகலின் கூறியது கூறலன்மையுணர்க.
   இத்துணையும் ஒருமொழி யிலக்கணங் கூறலின் மொழி மரபின் ஒழிபாயிற்று என்பர் உரையாசிரியர்.
     உயிரிறு சொன்முன் உயிர்வரு வழியும் 
     உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் 
     மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும் 
     மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் 
     றிவ்வென வறியக் கிளக்குங் காலை 
     நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் 
     றாயி ரியல புணர்நிலைச் சுட்டே. (தொல். 107)
   இது மேற்கூறும் புணர்ச்சி, நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியு மாகிய இருமொழிப் புணர்ச்சியா மல்லது மும்மொழிப் புணர்ச்சி யாகாதென்பதும், அப்புணர்ச்சி உயிரீற்றின்முன் உயிர், உயிரீற்றின்முன் மெய், மெய்யீற்றின் முன் உயிர், மெய்யீற்றின் முன் மெய் என எழுத்து வகையால் நான்காமென்பதும் உணர்த்துகின்றது.
   (இ-ள்) உயிரீற்றுச் சொல்முன் உயிர் முதன்மொழி வருமிட மும், உயிரீற்றுச் சொல்முன் மெய் முதன்மொழி வருமிடமும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர் முதன்மொழி வருமிடமும், மெய்யீற்றுச் சொல்முன் மெய்முதன் மொழி வருமிடமும், என அப்புணர்ச்சி இத்துணைய என்று வரையறுத்துச் சொல்லுங் காலத்து அவை ஒன்றோடொன்று புணரும் நிலைமையாகிய கருத்தின்கண், புணர்தற்கென நிறுத்த சொல்லாகிய நிலை மொழியும், அதன் பொருண்மையைக் குறித்து வரு சொல்லாகிய