பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொகைமரபு 139



   “புள்ளியிறுதி உயிரீறு என்றதனால் பேஎய் கோட் பட்டான், பேஎய்க்கோட்பட்டான் என்னும் எகரப்பேறும்,‘உரியவை உள’ என்றதனாற் பாம்பு கோட்டான், பாப்புக் கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலுங் கொள்க.
   இம்மூன்று வேற்றுமைத் திரிபினை, நன்னூலார்,
     புள்ளியு முயிரு மாயிரு சொல்முன் 
     தம்மி னாகிய தொழின்மொழி வரினே 
     வல்லினம் விகற்பமும் இயல்பு மாகும். (நன்.256)

என்பதனாற் கூறினார்.

   இதன்கண் வரும் உம்மையான் சுறாப் பாயப்பட்டான். அராத் தீண்டப்பட்டான் என வேற்றுமைப் பொதுவிதியான் மிக்கு முடிவனவே பெரும்பாலனவென்பர் சங்கர நமச்சிவாயர்.
     மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் 
     வல்லெழுத்து மிகுவழி மெலிப்போடு தோன்றலும் 
     இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் 
     உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் 
     சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் 
     சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் 
     சாரியை இயற்கை உறழத் தோன்றலும் 
     உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் 
     அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையலும் 
     மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும் 
     அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின் 
     மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் 
     ஐகார வேற்றுமைத் திரியென மொழிப. (தொல். 157) 
   இஃது இரண்டாம் வேற்றுமைத் திரிபு கூறுகின்றது. 
   (இ-ள்) மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தும், வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தும் தோன்றுதலும், இயல்பாய் வருமிடத்து மிகுந்து தோன்றுதலும், உயிர்மிக்கு வர வேண்டிய இடத்துக் கெட்டு வருதலும், சாரியைப் பேறு உள்ள விடத்துச் சாரியை கெட்டு வருதலும், சாரியைப் பேறு உள்ள விடத்துத் தன்னுருபு நிற்றலும், சாரியையின் இயல்பு மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத் தோன்றுதலும், இயல்பாகவரும் உயர் திணைப் பெயரிடத்து உருபு தொகாது நிற்றலும், உயர் திணையோடு விரவிய அஃறிணை விரவுப் பெயர்க்கு அத்