பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தொல்காப்பியம்-நன்னூல்



     இனியணி யென்னும் காலையு மிடனும் 
     வினையெஞ்க கிளவியும் கட்டு மன்ன. (தொல்.238)
     பதக்குமுன் வரினே தூணிக் கிளவி 
     முதற்கிளத் தெடுத்த வேற்றுமை யியற்றே. (தொல்,239)

என இகர வீற்றிலும்,

     இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் 
     உடனிலை மொழியு முளவென மொழிப. (தொல்.255)

என ஈகார வீற்றிலும்,

     சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும். (தொல்.255) 

என உகர வீற்றிலும்,

     வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும்
     நினையுங் காலை யவ்வகை வரையார்.  (தொல்.265)

என ஊகார வீற்றினும் அல்வழியில் வல்லெழுத்துமிகும் சொற்களை ஆசிரியர் விதந்து கூறியுள்ளார்.

     இச்சூத்திரங்களால் அகர வீற்றுள், வினையெச்சமும் அவ்வீற்று உவமச் சொல்லும் என வென்னும் வாய்பாட்டு எச்சமும் அகரச் சுட்டும் ஆங்கவென்னும் உரையசைச் சொல்லும் ஆகார வீற்றுள், செய்யா வென்னும் வாய்பாட்டு வினையெச்சமும், இகர வீற்றுள், இனி, அணி என்ற இரு சொற் களும், இகரவீற்று வினையெச்சமும், இகரச் சுட்டும், பதக் கென்னும் வருமொழியோடு புணரும் துணி யென்னும் சொல்லும், ஈகார வீற்றுள் மேல் இடத்தை யுணர்த்தும் மீ யென்னும் சொல்லும் உகர வீற்றுள் உகரச் சுட்டும், ஊகார வீற்றுள் வினையெச்சமும், முன்னிலை மொழியும், அல்வழிக் கண் கசதப முதல்மொழி வருமிடத்து வந்த வல்லெழுத்துக்கள் மிகப்பெறும் என்ற ஒரேவிதி கூறப்பட்டமை காண்க.
   (உ-ம்) அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன் என மூன்று சுட்டின் முன்னும் வருமொழி வல்லெழுத்துக்கள் மிக்கன.
   உணக் கொண்டான், உண்ணாக் கொண்டான், தேடிக் கொண்டான், உப்பின்றிப் புற்கை யுண்டான், உண்ணுக் கொண்டான் என அ ஆ இ ஊ என்னும் நான்கு ஈற்று வினை யெச்சத்தின் முன்னும் வருமொழி வல்லெழுத்து மிக்கன.