பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தொல்காப்பியம்-நன்னூல்



   (இ-ள்) மாறுபாடு கோடலையுடைய எச்சப்பொருண்மைக் கண்வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், வினாப்பொருண்மைக் கண் வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், எண்ணும் பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியுமென்பதாம்.
   மாறுகொ ளெச்சமாவது எதிர்மறை யெச்சமாம். 
   (உ-ம்; யானே கொண்டேன், சென்றேன், தந்தேன், போயினேன் என வரும். யானே கொண்டேன் என்புழி ஏகாரம் யான் கொண்டிலேன் என மாறுகொண்ட ஒழிபுபட நின்றது. நீயே கொண்டாய், சென்றாய், தந்தாய், போயினாய் என்புழி ஏகாரம் வினா. கொற்றனே சாத்தனே தேவனே பூதனே என் புழி ஏகாரம் எண்ணுப் பொருளைத் தந்து நிற்றல் காண்க
   மாறுகொ னெச்சமும் வினாவும் ஐயமும் 
   கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். (தொல்,290) 
   இதனால் ஓகார வீற்று இடைச்சொல் முடிபு கூறுகின்றார். 
   (இ-ள்) மாறுபாட்டினைக் கொண்ட எச்சப் பொருண்மை யினையுடைய ஒகாரமும் ஐயப்பொருண்மையினையுடைய ஒகாரமும் முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு -
   (உ-ம்)   யானோ கொண்டேன் (மாறுகொளெச்சம்)
             நீயோ கொண்டாய் (வினா) 
             பத்தோ பதினொன்றோ (ஐயம்)

எனவரும்.

     ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. (தொல்.291) 
   
   இதனால் ஒழியிசை ஒகாரமும் மேற்கூறிய ஒகாரங்களின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிகாது முடியுமென்று கூறினார்.
   (உ-ம்; கொளலோ கொண்டான் எனவரும். 
  
   இத்தொடர், கொண்டுய்யப் போமாறறிந்திலன்’ என ஒழிந்து நின்ற சொற்பொருண்மை புணர்த்தினமையின், இங்கு வந்த ஒகாரம் ஒழியிசைப் பொருளில் வந்ததாகும்.
   மேற்கூறியவாறு ஏகார ஓகாரங்களாகிய இடைச்சொற்கள் வல்லெழுத்து மிகாது இயல்பாமென்பது,
   இடைச் சொல் ஏ ஒ முன்வரி னியல்பே. (நன்.201) 

என நான்னுாற் சூத்திரத்துங் கூறப்பட்டது.