பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தொல்காப்பியம்-நன்னூல்


    (உ-ம்) ‘வேனவா நலிய வெய்யவுயிரா’ எனவரும். வேட்கையாவது பொருள்கள்மேற் றோன்றும் பற்றுள்ளம், அவா வாவது அப்பொருள்களைப் பெறவேண்டுமென்னும் ஆசை. எனவே வேனவா என்பதற்கு வேட்கையாலுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரித்துப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.


8. புள்ளி மயங்கியல்
   இது, மெய்யிறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறலின் புள்ளிமயங்கியல் எனப் பெயர்பெற்றது. மெய்கள் புள்ளி பெறுதலாற் புள்ளியென வழங்கப் பெறுவன வாயின. புள்ளியிறுகளுள் உகரம் பெறுவன, இறுதிகெட்டு வல்லெழுத்து மிகுவன, மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன, மெல்லெழுத்து மிகுவன இவ்விரண்டும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, உருபியல் விதிகள், திரிந்து முடிவன ஆகியவற்றை இவ்வியலில் விரித்து உணர்த்துகின்றார்.

1. உகரம் பெறுவன

ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயி னான. (தொல். 296)

ஞநமவ இயையினும் உகரம் நிலையும். (தொல், 297)

   இவ்விரு சூத்திரத்தும் ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாய் நின்ற தொழிற்பெயர்முன்னர் அல்வழி வேற்றுமை ஆகிய ஈரிடத்தும் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, அவ்வல்லெழுத்து வருமொழிக்கண் மிகும்படி, நிலைமொழியிறு உகரம் பெற்று முடியும் எனவும் வருமொழிக்கண் வன்கணமன்றி ஞநமவ முதலாய் வருமிடத்தும் நிலைமொழிக்கண் ஞகராறு உகரம் பெற்று முடியும் எனவும் கூறினார் தொல்காப்பியனார். இவ்விதிகளை,

நகர விறுதியும் அதனோ ரற்றே. (தொல்,298)

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல்,306)

தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. (தொல்.327)