பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புள்ளி மயங்கியல் 207

எனவும் வரும். மேற்குறித்த ணகர, ளகர, னகர லகர வீற்றுத் திரிபினை நன்னூலாசிரியர்,

        “ணனவல்லினம் வரட் டறவும்:                       (நன்.209)

எனவும்,

       ‘லளவேற்றுமையிற் றடவும்’                          (இன்.227) 

எனவும் வரும் சூத்திரத் தொடர்களால் நிரனிறையே குறித்து உள்ளார்.

     ‘எண்’ எனவரும் பெயர், எண்ணாகிய வரையறைப் பொருண்மையினை யுணர்த்தாது, எள் என்னும் உணவுப் பொருளை யுணர்த்திய நிலையில், அப்பெயரிறுதி ணகரம் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அல்வழியிலும் வேற்றுமையிற்போல டகரமாய்த் திரிதலும் உண்டு. இத் திரிபினை,
       வேற்றுமை யல்வழி எண்ணெ னுணவுப்பெயர் 
       வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே.         (தொல்.308) 

என்ற சூத்திரத்தால் தொல்காப்பியர் தொகுத்துள்ளார்.

    (உ-ம்) எண்-கடிது = எண்கடிது, சிறிது, தீது, பெரிது என இயல்பாய் வருதலேயன்றி எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனத் திரிந்தும் வந்தமை காண்க. இவ்வுறழ்ச்சி முடியினை விளக்குவது,
      “உணவெண் சாண்பிற 
       டவ்வா கலுமாம் அல்வழி யும்மே”        (நன்.211) 

என்ற நன்னூற் சூத்திரம்.

    நெல், செல், கொல், சொல் என்னும் லகர வீற்றுச் சொற்கள் நான்கும் வல்லெழுத்து வருவழி அல்வழியிலும் வேற்றுமை முடியின் இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை,
      நெல்லுஞ் செல்லும் கொல்லுஞ் சொல்லும் 
      அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல.         (தொல்.371) 

என்பதனால் தொல்காப்பியர் கூறினார்.

   (உ-ம்) நெல்+காய்த்தது=நெற்காய்த்தது, சிறிது, தீது, பெரிது
            செல்+கடிது=செற்கடிது, சிறிது, தீது, பெரிது 
            கொல்+கடிது=கொற்கடிது, சிறிது தீது, பெரிது 
            சொல்+கடிது=சொற்கடிது, சிறிது, தீது, பெரிது