பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

தொல்காப்பியம்-நன்னூல்



    ‘முன் என்னுஞ்சொல் நிலைமொழியாய் நிற்க, அதன்முன் இல் என்பது வருமொழியாய்வரின், அச்சொல்லின் மேலே றகரமெய் ஒன்று தோன்றி நின்று முடிதல், தொன்றுதொடு மருவிவந்த இலக்கண முடிபு என்பர் ஆசிரியர்.
       முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் 
       இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல் 
       தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே.     (தொல்,355) 

எனவரும் சூத்திரம் இம்மரூஉ முடிபினைக் குறிப்பதாகும்.

(உ-ம்) முன்+இல் = முன்றில் எனவரும்.

      பொன், என்னும் னகரவீற்றுச் சொல் செய்யுளிற் பயிலுங்கால், தன் இறுதியாகிய னகரம் கெடாதிற்க அதன் முன்னர் லகர வுயிர்மெய்யும் மகரவொற்றும் முறையே வந்து “பொலம் எனத் திரிந்து முடிதல் உண்டு.
      பொன்னென் கிளவி யிறுகெட முறையின் 
      முன்னர்த் தோன்றும் லகார மகாரம் 
      செய்யுள் மருங்கிற் றொடரிய லான.       (தொல்.356) 

என்ற சூத்திரத்தால் இத்திரிபினைக் குறிப்பிடுவர் ஆசிரியர்.

(உ-ம்) பொலஞ் சுடராழி பூண்டதேரே எனவரும்.

  ‘இல் என்னும் லகரவீற்றுச் சொல், இருப்பிடமாகிய மனையை யுணர்த்தாது ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்துமிடத்து, அதன்முன் இடையே ஐகாரம் வருதலும், அவ்வழி வல்லெழுத்து மிகுதலும், இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், (முற்கூறியவண்னம் வல்லெழுத்து மிகும்படி) இடையே ஆகாரம் வந்து முடிதலும் ஆகிய இவற்றைத் தன் முடிபாக உடையதாகும். இம்முடிபுகளை, -
      இல்லென் கிளவி இன்மை செப்பின் 
      வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும் 
      இயற்கை யாதலும் ஆகாரம் வருதலும் 
      கொளத்தகு மரபின் ஆகிட னுடைத்தே.        (தொல்,373) 

என்ற சூத்திரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம்.

     (உ-ம்) இல்+கல் = இல்லைக்கல், இல்லைகல், இல்கல்,
             இல்லாக்கல்-சுனை, துடி, பறை எனவரும். 

இல்லாமையை உணர்த்துவதாகிய இல் என்னுஞ் சொன் முடிபுகளை,