பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

தொல்காப்பியம்-நன்னூல்



       திரிபுவேறு கிளப்பின் ஒற்று முகரமுங் 
       கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் 
       ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் 
       தெற்கொடு புனருங் காலை யான, (தொல்.432) 

இது பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்த்தலின் எய்தாதெய்துவித்தது.

   (இ-ள்) பெருந்திசைகளோடு கோணத்திசைகளை வேறாகப் புணர்க்குமிடத்து அவ்வுகரமேறி நின்றமெய்யும் அவ்வீற் றுகரமுங் கெட்டு முடிதல் வேண்டுமென்பர் அது தெற்கென்ற திசையோடு புனருங்காலத்து அத்திசைக்குப் பொருந்தி நின்ற நகரவொற்றுத் தன் வடிவு திரிந்து னகரவொற்றாய் நிற்கும். (எ-று).
   (உ-ம்) வடக்கு+கிழக்கு - வடகிழக்கு, வடமேற்கு: தெற்கு+கிழக்கு - தென்கிழக்கு, தென்மேற்கு எனவரும். வேறு என்றதனால் வடவேங்கடம், தென்குமரி எனத் திசைப் பெயரோடு பொருட்பெயர் புனரும் வழியும் இவ்விதி பொருந்தி நிற்றல் கொள்க.
   திசையோடு திசைபுனரும் இவ்விதியில் திசையொடு பிற சொற்கள் புணருமியல்பையுஞ் சேர்த்து மேற்கு என்ற திசைப்பெயர் பிறபெயரோடு புணருங்கால் றகரம் லகரமாகத் திரிதலையுங் கூட்டி,
       திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் 
       நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் 
       றகரம் னலவாத் திரிதலு மாம்பிற.             (நன்.186) 

எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார்.

குற்றியலுகரவீற்றெண்ணுப் பெயர் முடிபு.

      ஒன்றுமுத லாக எட்ட னிறுதி 
      எல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் 
      குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே 
      முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே.    (தொல்,433) 

இது பத்தென்னும் எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர் வந்து புனருமாறு கூறுகின்றது.

   (இ-ள்) பத்தென்னும் எண்ணுப் பெயர்முன் ஒன்று முதல் ஏட்டீறாகவுள்ள எல்லாவெண்ணுப் பெயர்களும் வந்து புணருமாயின் பத்தென்னும் நிலைமொழியீற்றினின்ற குற்றுகரம்