பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

தொல்காப்பியம்-நன்னூல்



   (இ-ள்) இரண்டென்னும் எண் முதலாக ஒன்பதீறாக நின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் வழக்கின் கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்குரிய மாவென்னுஞ்சொல் வரு மொழியாய்வரின் அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டை யென்னும் மகரமுதல் அளவுப் பெயரோடொத்து விகாரப் படுதலுமுடைத்து என்பதாம்.
   உம்மையான் விகாரப்படாது இயல்பாய் முடிதலு முரித்தெனக் கொள்க.
   (உ-ம்) இருமா, மும்மா, நான்மா, ஐம்மா, அறுமா, எழுமா, எண்மா, ஒன்பதின்மா, எனவரும். இரண்டுமா, மூன்றுமா எனவும் வரும்.
   விலங்குமாவை நீக்குவதற்கு வழங்கியன்மா என்றார். இச் சூத்திரத்து இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின் ஒன்றென்பதன் முன்னர் ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. மிக்க எண்ணோடு குறைந்த எண் வருங்கால் உம்மைத்தொகையாகவும் குறைந்த எண்ணோடு மிக்க எண் வருங்கால் பண்புத்தொகை யாகவும் முடித்தல் ஆசிரியர் கருத்தாகும்.
       லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் 
       உம்முங் கெழுவும் உளப்படப் பிறவும் 
       அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் 
       செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் 
       வேற்றுமை குறித்த பொருள்வயி னான.            (தொல்.481)
    இது, லகார, னகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுகின்றது என இளம்பூரணாரும், இது புள்ளி மயங்கியலுள் ஒழிந்து நின்ற செய்யுள் முடிபு கூறுகின்றது என நச்சினார்க்கினியரும் கூறுவர்.
   (இ-ள்) லகார ணகாரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் உம், கெழு என்னுஞ் சாரியைகளும் பிற சாரியைகளும் அப்பெற்றிப்பட்ட மொழியிடத்தே தோன்றி, செய்யுட் சொற்களைத் தொடர்புபடுத்திக் கூறுமிடத்து வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் பொருள்பெற நிற்கும் எனபதாம.
   (உ-ம்) வானவரிவில்லுந் திங்களும், கல்கெழுகானவர் நல் குறுமகளே எனவும், மாநிதிக்கிழவனும் போன்ம்’ எனவும் கான்கெழு நாடு எனவும் வரும்.