பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்க்கை 255

எனவரும் சூத்திரத்தில் பவணந்தியார் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.

   மொழிகள் தம்முட்புணருங்கால் ஒரெழுத்து நிற்றற்குரிய நிலையில் மற்றோ ரெழுத்துப் போலியாய் நிற்றலுண்டு என்பதனை,
       ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் 
       வினையோ ரனைய என்மனார் புலவர்.     {தொல்.146)

என்பதனால் உணர்த்தினார் தொல்காப்பியர். இவ்விதியினை இறந்ததுவிலக்கல் என்னும் உத்திபற்றிப் பவணந்தியார் கூறாது விட்டனராயினும், இவ்வாறு மொழியின் முதலிலும் இடையிலும் பயின்று வரும் எழுத்துப் போலிகளை எதிரது போற்றல் என்னும் உத்தியால் நன்னுரல் 123, 124-ஆம் சூத்திரங்களிற் குறித்துள்ளார்.

   சில விடங்களில் மொழி முதலிலும் இடையிலும் அகரம் நின்ற நிலைக்களத்து ஐகாரம் போலியாய் வருமென்பதனை யுணர்த்துவது,
      அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். (நன்.123) 

என்ற சூத்திரமாகும்.(உ.ம்) மயல் மையல் எனவும், அரசு அரைசு எனவும் வரும்.

   சில இடங்களில் ஐகாரத்தின் பின்னும் யகரவொற்றின் பின்னும் இயல்பாய நகரம் நின்ற நிலைக்களத்து ஞகரம் போலியாய் வருதலுண்டென்பது,
       “செய்ஞ்ஞன்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் 
       மைஞ்ஞன்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க 
       நெய்ஞ்ஞன் றெளியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் 
       கைஞ்ஞன்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு
                                                   காண்பதென்னே.” எனத்திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தத்தால் அறியப்படும். இவ்வாறு செய்+நின்ற = செய்ந்நின்ற செய்ஞ்ஞன்ற எனவும், மை+நின்ற = மைந்நின்ற மைஞ்ஞன்ற எனவும் புணர் மொழி யிடைவரும் போலியைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி,
       ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி 
       ஞஃகா னுறழு மென்மரும் உளரே.            (நன் 124)

என்ற சூத்திரத்தாற் குறித்தார் பவணந்தி முனிவர்.