பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

19

வற்றைத் தாமே பகுபதம், பகாப்பதம் என முன்னர் நாட்டி, அதனையுணர்த்தும் அவ்வியற்குப் பதவியலெனப் பெயர் தந்து, அதன்கண் பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானுமாகிய ஆரிய மொழிகள் திரிந்து தமிழ் மொழியுள் வடசொல்லாமாறு வட மொழியாக்கத்தினையும் உடன் கூறிச்செல்கின்றார். இவ்வியலில் பவணந்தியார் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப் பகுபத உறுப்பினை ஆறாகப் பிரித்து ஒருமொழியிலக்கணங் கூறியுள்ளார். இங்ஙனம் இவர் வடமொழியிலக்கணத்தினை ஆதரவாக வைத்துக் கொண்டு பதவியலில் விதி கூறியதற்கு, இவர் காலத்தும் இவர்க்கு முன்னரும் வடமொழி வாணர்கள் தமிழ்நாட்டில் புகுதலால் அவர்தம் பழக்க வொழுக்கங்களும் தமிழ் நாட்டாரால் மேற்கொள்ளப்பெற்று ஆரியச் சொற்கள் அளவு கடந்து தமிழ் நூல்களுட் புகுந்தமையே பொருந்திய காரணமாகும்.

1. நூன்மரபு

“இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தை ஓராற்றாற் றொகுத்துணர்த்தலின் நூன்மரபு என்னும் பெயர்த்து” என இளம்பூரணரும், இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபாந்துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்துணர்த் தினமையில் நூன்மரபென்னும் பெயரத்தாயிற்று’ என நச்சினார்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணம் கூறினர். “இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தினைத் தொகுத்துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகாரமரபெனப்படுவ தன்றி நூன்மரபெனப் படாமையாலும், இவ்வதிகாரத்துட் கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துள் செய்யுளியலொன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதிகாரத்துக் கும் பொதுவாகாமையானும் அவை போலியுரையாதலறிக” என இருவருரையையும் மறுத்த சிவஞான முனிவர்,

நூன்மரபு: அஃதாவது நூலினது மரபுபற்றிய பெயர் கூறுதல் எனவே இதுவும் இவ்வோத்துட் கூறுஞ் சூத்திரங்களுக் கெல்லாம் அதிகாரமென்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு, குளம் என்றற் றொடக்கத்து உலக மரபுபற்றிய பெயர் போலாது ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற்றொடக்கத்துப் பெயர்கள் நூலின் கண் ஆளுதற் பொருட்டு முதனூலாசிரியனாற் செய்து கொள்ளப்பட்டமை