பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

31


கூறினாரன்றி ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமை யானும், அளபெடை சார்பெழுத்தென வேறாகாமை முன்னர்க் காட்டப்பட்டதாகலானும், ஐகாரக் குறுக்கம் முதலியன ஒரு காரணம் பற்றிக் குறுகிய வாகலிற் சிறுமரம் பெருத்துழியும், பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரமாகாதவாறு போல வேறெழுத்தெனப் படாவாகலானும் . அது பொருந்தாதென மறுக்க. வன்றொடர் மொழிக்குற்றியலுகரம் வல்லெழுத்து வருவழிக் கால் மாத்திரையாய்க் குறுகுதலின் அதுபற்றி அதனைக் குற்றியலுகரத்தின் வேறென்னாமையின் அவர்க்கும் (பவணந்தியார்க்கும்) அது கருத்தன்று போலுமென்க” என ஆசிரியர் சிவஞான முனிவரும் சூத்திர விருத்தியுள் கூறி மறுத்தமை ஈண்டு வைத்துணரற்பாற்று.

       அவற்றுள், அ. இ. உ
       எ ஒ என்னும் அப்பா லைந்தும்
       ஒரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. (தொல். 3)
 இது, மேல் எழுத்தெனப்பட்டவற்றுள் ஒரு சாரனவற்றிற் குரிய மாத்திரையளவும் காரணப் பெயரும் உணர்த்துகின்றது.
 (இ-ள்) மேற்கூறிய முப்பதெழுத்தினுள் அ, இ, உ, எ, ஒ என்பன ஐந்தும் ஒரோவொன்று ஒரு மாத்திரையாக ஒலிக்கும் குற்றெழுத்து என்னும் பெயருடைய என்றவாறு
 குற்றெழுத்து-குறிதாகிய எழுத்து எனப் பண்புத்தொகை இஃது ஒரு மாத்திரையாகிய குறுமையோசையாற் பெற்ற காரணப்பெயர். ஒளினப் பொருள்களினுள்ளேயே குறுமை நெடுமை கொள்ளப்படுமாகலின், இக்குற்றெழுத்தினுங் குறைந்து மெய்கள் அரை மாத்திரையாக ஒலிப்பனவாயினும் அவ் வரை மாத்திரையினும் மிக்கொலிப்பவற்றைத் தம்முட் பெறாமையின் குற்றெழுத்தெனப்படாவாயின என்பர் நச்சினார்க்கினியர்.
         ஆ ஈ ஊ ஏ ஐ 
         ஒ ஒள என்னும் அப்பா லேழும் 
         ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப. (தொல். 4)

இதுவுமது.

 இ-ள்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஏழும் இரண்டு மாத்திரையளவாக ஒலிக்கும் நெட்டெழுந்தென்னும் பெயரின என்று சொல்வர் ஆசிரியர் எ-று;