பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

37



காப்பியனார் வேறுபிரித்துக் கூறுதலால் அவர்க்கு முற்பட்ட பண்டைத் தமிழாசிரியர்கள் உடலையியக்கும் ஆற்ற லொன்றுண்டெனக் கொண்டு அதனை உயிரெனவும், அவ் உயிரால் இயக்கப்படும் உடலை மெய்யெனவுங் குறியிட்டு வழங்கினார்கள் என்பதும், எனவே உயிர் வேறு உடல்வேறு என்னுங் கொள்கை அவர் தமக்கு உடன்பாடென்பதும் பெறப்படும்.

 உயிர் ஆவி யென்பன ஒரு பொருளன. மெய் உடம்பு என்பன ஒரு 

பொருட் சொற்கள்.

  இவ்வாறே நன்னூலாரும்,
        அம்முத லீரா றாவி கம்முதல் 
        மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்,    (நன், 63) 

எனச் சூத்திரஞ்செய்தார். இதனால் அகர முதலிய பன்னிரண்டும் ஆவி (உயிர்) எனவும், ககர முதலிய பதினெட்டும் மெய்யெனவும் பெயர்பெறுமென விளக்கினார். இப்பெயர், யானிட்டதன்று முன்னையோரிட்ட முறைமைத்தென்பார் “விளம்பினர் புலவர்” என்றார்.

         ஆவியும் மெய்யும் போறலின் இவ்விருவகை யெழுத்துக் களும் உவம வாகுபெயராய்க் காரணப் பொதுப் பெயராயின வென்பர் சங்கர நமச்சிவாயப்புலவர்.

மெய்யோ டியையினும் உயிரியல் திரியா. (தொல். 10)

       இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுதல் துதலிற்றென்பர் உரையாசிரியர்.
       (இ-ள்) பன்னிருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும் தம் அளவும், குறியும், எண்ணும் திரிந்து நில்லா எறு.
   உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை “மெய்யோடியையினும்” என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறுகின்றமை நோக்கிப்போலும் என்பர் இளம்பூரணர்.
   உயிர்மெய் என்னும் பெயர், உயிரும் மெய்யும் கூடி நின்ற நிலையிற் பெற்றதாயினும் அக்கூட்டத்து, மற்றதனோடு இயைதலாகிய வினையினை உயிரின் தனி வினையாக்கிக் கூறியது, தன்னிலையில் தனித்தியங்குந் தன்மை உயிர்க்கே யன்றித் தனி மெய்க்கு இன்மையின் அவ்வாற்றலில்லா மெய்யோடு சென்று