பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

41



பெறுதற்குரியதாய தலைப்புள்ளியோடு குறுகிய மகரத்தின் உள்ளேயும் ஒரு புள்ளியை இட்டு வரிவடிவில் அதனைக் குறித்துப் போந்தார்கள் என்பது இச்சூத்திரத்தாற் குறிக்கப்பட்டது. ஒசை குறுகிய எழுத்தினைப் புள்ளியிட்டுக் காட்டும் முறை உண்டென்பது “மெய்யிறெல்லாம் புள்ளியொடு நிலையல்” என்றதன் விதியைக் “குற்றியலுகரமும் அற்றென மொழிப’ என அடுத்த சூத்திரத்தில் மாட்டெறிந்து ஈற்றுக் குற்றியலுகரமும் மெய் போலப் புள்ளியொடு நிற்கும் எனக் கூறுதலாற் பெறப்படும். இவ்வாறு தன்னியல் பாம் ஒரு மாத்திரையினின்றும் குறுகி அரை மாத்திரையியல்பில் நிற்கும் குற்றியலுகரம் ஈற்றில் புள்ளி பெறுதல் போலத் தன் அரைமாத்திரையிற் குறைந்த மகரமும் புள்ளி பெறுதல் இயல்பும் முறையும் ஆகும்.

 இவ்வாறே மகரக் குறுக்கம் இயல்பாகிய புள்ளியொடு உள்ளேயொரு புள்ளியையும் பெறுமென்பதனை வீரசோழியம் சந்திப்படலம் 19ம் செய்யுளுள் “முன்வயிற் கால்வவ்வரின்” வருமொழி முதலில் வகரம் வந்து புணர்ந்தால் அந்த மகரமானது குறுகிக் கால் மாத்திரையாய் உட்புள்ளிபெறும்” எனப் பெருந்தேவனார் உரை கூறிப் போதலானும் நன்கறியலாம்.
   மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். (தொல். 15)

 மேல் மகரத்திற்கும் மகரக் குறுக்கத்திற்கும் வரிவடிவு வேற்றுமைக்கு அறிகுறியாக மகரக்குறுக்கத்திற்கு உட்பெறு புள்ளி உருவாகும் என்றார். ஆண்டுப்புள்ளி பெறுதல் அதிகாரப் பட்டமையின், எல்லா மெய்களுக்கும் பொதுவாகிய புள்ளி பெறுதலை இதனாற் கூறுகின்றார். இஃது உயிர்மெய்யோடு தனி மெய்யிடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நூதவிைற்று என்பர் உரையாசிரியர்.
 இ-ள் மெய்களின் தன்மையாவது புள்ளிபெற்று நிற்றலாம். 
   
   எகர ஒகரத் தியற்கையும் அற்றே. (தொல், 16) 
 இதுவும் வரிவடிவு வேற்றுமை கூறுகின்றது. 
 (இ-ள்) எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று.

பண்டைக்காலத்து எ, ஏ ஆகிய குறில் நெடில் இரண்டிற்கும் எ, என்ற வடிவும் ஒ, ஓ ஆகிய குறில் நெடிலிரண்டிற்கும் ஒ r.A.