பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காண்கிறோம். "சின் என்பதிலுள்ள இகரத்தால் உகரந் திரிந்தது" என்பார் தே. ஆண்டியப்பன். (காப்பிய நெறி பக். 116)

தண்னென் றிசினே பெருந்துறைப் புனலே (தண் என்றது)
விசும்பிழி தோகை சீர்போன் றிசினே (போன்றது)

எனறிவற்றுள் என்று, போன்று என்னும் வடிவங்கள் என்றிசின், போன்றிசின் ஆகலாம் என்பர்.

புறம். 11இல் வேந்தன் புறம் பெற்றிசின்: பாண்மகன் பூப்பெற்றிசின்: பாடினி இழை பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன" என்கிறார்.

இவ்வாறே புறம் 35இல் இனிது காண்டிசின் பெரும என்றவிடத்து, "இசின் தன்மைக்கண் வந்தது" என அவர் கூறுகிறார்.

இவ்வுரைகளான சின் என்றவிடத்து இசின் என்பதும் பயிலப்பெறும் என்பதும், இம்மாற்றம் நாளாவட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படலாயிற்று என்பதும் போதரும்.

புறம் 27இல் மாய்ந்திசினோர் என்றும், 272இல் காதல் நன்மா நீ மற்றிசினே என்றும் உள. பின்னதில் இரண்டு அசைகள் இருத்தலும், அவற்றுள் ஒன்று இசின் என்பதும் புலனாகிறது. இதனால் இன் என்பதனோடு இசின் என்பதும் அசைநிலைகளுள் ஒன்று என்பது உறுதியாகிறது.

மாய்ந்திசினோர் (புறம், 27)- இசின் நீங்க-மாய்ந்தோர்
வளர்ந்திசினோ அங்கு (ஐங். 44)- இசின் நீங்க- வளர்ந் தாங்கு
கேட்டிசின் (ஐங், 59)- இசின் நீங்க- கேட்டி
மறுத்திசினோரே (பதிற். 45)- இசின் நீங்க- மறுத்தோர்.

இனித் தொல்காப்பிய ஆட்சிகளைக் காண்போம்.

சிறந்திசினோரே (293) - சிறந்தோர்
உணர்ந்திசினோரே (603, 1330) - உணர்ந்தோர்
அறிந்திசினோரே (645, 1473) - அறிந்தோர்
என்றிசின் பெயரே (1265) - என்று பெயரே

இசின் என்பதற்குப் பதில் சின் என்பதே அசைச்சொல் என்று கொண்டவா உணர்ந்துசினோரே, அறிந்துசினோரே என்று எழுதியவராதல் கூடும். இத்தகைய பாடவேறுபாடுகளும் சுவடிகளில் காணக்கிடைக்கின்றன.