பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

169



தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் தாழ் நிலையில் வாடுவதை நேரில் கண்ட திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், அவர்களது முன்னேற்றத் திற்காக ஐம்பதாயிரம் ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

காவல் துறைக்காக இப்போதுதான் தமிழ்நாடு அரசு அக்கறை காட்டி வருவதைப் பார்க்கின்றோம். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக, காவல்துறைக்கு உதவி செய்வதாக மக்கள் இன்று பேசுகிறார்கள்.

ஆனால் நாயுடு அவர்கள், காவல் துறையிலே இருந்து எந்தவிதப் பிரதி உதவிகளையும் எதிர்பாராமல்; 1945-ஆம் ஆண்டின் போதே, காவலர்களின் குழந்தைகள் வளர்ச்சிக்காக ஐம்பதாயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

அந்தக் காலத்தில் இலட்சம் ரூபாய் என்றால் ஐம்பதாயிரம் ரூபாய் என்றால், பத்து இலட்சம் ரூபாய் என்றால், அதன் இக்கால மதிப்பும் - மரியாதையும், எவ்வளவாக இருக்கும் என்று எண்ணிப் பார்ப்போருக்குத்தான் அவற்றின் அருமைகளை, அறிய முடியும்.

சென்னை மாகாணக் கவர்னராக இருந்த சர்.ஹார்தர் ஹோப் அவர்கள், ஜி.டி. நாயுடு அவர்கள் மேற்கண்டவாறு இலட்சோப இலட்சம் ரூபாய்களை வாரி வாரி வழங்குவதைக் கண்டு, ஜி.டி. நாயுடுவை இந்தியாவின் நப்ஃபீல்டு (Lord Nufffield) என்று புகழ்ந்து பாராட்டினார்.

திரு. ஹார்தர் ஹோப், திரு. நாயுடுவை ஏன் அவ்வாறு புகழ்ந்தார் தெரியுமா? இங்கிலாந்து நாட்டில் நப்ஃபீல்டு பிரபு என்ற ஒரு செல்வச் சீமான் இருந்தாராம். அவர் தனது வருமானத்தின் பெரும் பகுதிப் பணத்தைக் கல்விக்கும், சமுதாய நன்மைகட்கும் நன்கொடைகளாக வாரி வாரி வழங்கிய வள்ளலாக வாழ்ந்தாராம்.

தமிழ்நாட்டில், கோவை மா நகரில் ஜி.டி. நாயுடு என்ற பெருமகனும், நப்ஃபீல்டைப் போல வாரி வாரி வழங்குகின்றாராம். அதனால், அந்தக் கவர்னர் பெருமகன் தனது நாட்டு வள்ளல் பெயரைக் குறிப்பிட்டு நாயுடுவை வாய் மணக்க வாழ்த்திப் புகழ்ந்தார். அதை யெல்லாம் தமிழன் அன்று நினைத்துப் பார்த்தானா? ஏன் இன்றுதான் எண்ணி மகிழ்ந்து மரியாதை காட்டி வாழ்த்துகிறானா? ஆனால் பேசுவது என்னமோ தமிழ் - தமிழன் என்ற சுயநலப் பிரச்சாரம் தான்!