பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

173



தனது மகள் சரோஜினி திருமணத்தை 1944-ஆம் ஆண்டில் சென்னை ஆளுநர் சர். ஹார்தர் ஹோப் தலைமையில், மிகவும் சிக்கனமாக மோதிரமும் - மாலையும் மாற்றித் திருமணம் செய்து வைத்து தேநீர் விருந்தும் கொடுத்தார் ஜி.டி.நாயுடு.

அவர் நடத்திய அந்தத் திருமணத்தில் புரோகிதம் இல்லை என்பதுடன், மிகச் சிக்கனமானத் திருமணத்தை நடத்தி, மற்றவர்களும் திருமணத்துக்காக இலட்சக் கணக்கில்,பணம் செலவு செய்வதைத் தடுக்கும் அளவுக்கு ஒரு வழி காட்டியாக நடந்தார்.

தொழிலியல் வளர்ச்சிகளை மக்கள் அறிந்து அறிவு பெறவேண்டும் என்ற ஆவலில், 1949-ஆம் ஆண்டில் கோவை மாநகரில் ஒரு தொழிலியல் கண்காட்சியை, பல இலட்சம் மக்கள் திரண்டு வந்து தொழிலறிவு பெறுவதற்கான வகையில் ஜி.டி.நாயுடு நடத்திக் காட்டினார்!

இதைவிடச் சிறப்பு என்ன வென்றால், ஜி.டி.நாயுடு அவர்கள் உருவாக்கியுள்ள 'கோபால் பாக்' என்ற கட்டடமே ஓர் அழகான அருங்காட்சியகமாக இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதைக் கோவை மாநகர் செல்லும் பொது மக்கள் காணலாம்.

அந்தக் கட்டடத்தின் எல்லா பகுதிகளும் பூமிக்கு அடியில் மின்சாரக் கம்பிகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்தில் இருப்போருடன் மின்சாரக் கருவி மூலமே தொடர்பு கொள்ளலாம்.

கட்டிடத்தின் மையப் பகுதியில் உள்ள நடு மண்டபம் 370 அடி நீளமும்,75 அடி அகலமும் கொண்ட பகுதியாகும். அங்கு எந்த வித எதிரொலியும் கேட்காது. காற்றோட்டம் சுகமாக வந்து கொண்டே இருக்கும். வெளிச்சம் வெள்ளொளியாக எதிரொலிக்கும். காலையானாலும் சரி, மாலையானாலும் சரி, எந்த நேரமும் நமது நிழலே அங்கு விழாது.

அந்தக் கட்டடத்திற்குள் வானவூர்தி, ரோல்சுராய்ஸ் மோட்டார்கார் போன்ற விலையுயர்ந்த கார்களின் கருவிகள் எல்லாம் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.