பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

175



மேதினியை நாயுடு வலம் வந்தது, தமிழ்க் கடவுளான முருகப் பெருமானைப் போல ஒரு மாம்பழத்திற்காக அன்று:அல்லது தற்கால மக்களாட்சியின் சட்டமன்றம், நாடாளு மன்றங்களின் மக்கள் பிரதிநிதியாக, மத்திய அரசு மாநில அரசுகளின் செலவுத் தொகையில் உலகம் சுற்றியவர் அல்லர். தனது சொந்தப் பணத்தில் தந்தை பெரியார் அயல் நாட்டுப் பயணம் சென்று வந்ததைப் போல, கோவை கொடை வள்ளலான ஜி.டி.நாயுடு அவர்கள். தொழிலியல் துறையில் விஞ்ஞானியாகும் ஆர்வத்தால், அறிவியல் உலகம் சுற்றும் வாலிபனாக அவர் வலம் வந்தார் என்றால், இது என்ன வேடிக்கை ஊர்வலம் பவனியா?

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரிலே ஜி.டி.நாயுடு ஒரு தடவை தங்கியிருந்த போது, ஒரு விருந்து நடத்தினார். அப்போது நமது தமிழ் நாட்டின் சிற்றுண்டி வகைகளில் ஒன்றான "உப்புமா'வைச் செய்து விருந்துக்கு பரிமாறினார்!

உப்புமாவை இரசித்து உருசியோடு சுவைத்து உண்ட வெள்ளையரின் பெண்மணிகளுக்கு, உப்புமாவை எப்படிச் செய்வது என்பதையும் கற்றுக் கொடுத்தார் ஜி.டி.நாயுடு. தமிழ்நாட்டு உணவுக்குரிய சுவைக்குப் பெருமை தேடித் தந்தது மட்டுமன்று, தமிழர் தம் அறுசுவை உண்டிக்கும் புகழை உருவாக்கியவர் திரு.நாயுடு.

திரு. ஜி.டி.நாயுடு வெளிநாடு போவதும் - வருவதும் ஒரு கர்ப்பிணியின் பிரசவம் போல, அவர் எப்போது வெளிநாடு போவார் - எப்போது வருவார் என்பது எப்போது மழை வரும், எப்போது குழந்தை பிறக்கும் என்பதைப் போன்றதே! எவருக்கும் முன் கூட்டியே தெரியாது.

திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், தனது சொந்தப் பணத்தில் உலகத்தைப் பல தடவைகள் சுற்றிச் சுற்றி, தாம் கண்ட அறிவில் அறிவை வெளிப்படுத்தியும். அவர் பார்த்து மகிழ்ந்த விஞ்ஞான விந்தைகளை, கண்டு பிடித்து உலகுக்கு அளித்த புதிய புதியக் கண்டு பிடிப்புக் கருவிகளை, அப்போதைய மத்திய அரசும், மாநில அரசும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாததைக் கண்டு அவர் மனம் வேதனை எரிமலை ஆனது!