பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



அவ்வாறு விரும்பினால், நாம் நன்றியுடையவர்கள் தான் என்பது உண்மையானால், இனியாவது அவருடைய அற்புத அறிவை, மாணவர்களின் விஞ்ஞான பாட, போதனைகளில் அவரது முழு கண்டுபிடிப்புக்களைப் பாராட்டும் வகையிலே பாடங்களாகச் சேர்த்துப் படிக்க வைப்போமானால், அதன் மூலமாக ஒரு புதிய விஞ்ஞானப் பரம்பரையை நம் நாட்டில் தோற்றுவிக்க வழி வகுத்தவர்களாக ஆவோம்.

கோவை திரு. ஜி. துரைசாமி நாயுடு எனப்படும் ஜி.டி. நாயுடு என்று மக்களால் போற்றப்பட்ட அந்த மக்கட் குல மேதை. இந்த நாட்டுக்கு வழங்கியுள்ள விஞ்ஞானச் செல்வங்களும், இந்திய மக்கள் மீது அவர் காட்டியுள்ள வாழ்க்கை அக்கறை வழிகளும் எண்னற்றவை.

அவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டால், இந்திய நாடும், தமிழ் நாடும், மேல் நாடுகளைப் போல விஞ்ஞான வாழ்வை வாழ்ந்து காட்டுபவர்களாக, உலகத்தால் மதிக்கப்படுவோம் - போற்றப்படுவோம்.

குறிப்பாக, மாணவர் உலகம் திரு. ஜி.டி. நாயுடு அவர்களது அறிவைப் பின் தொடர்ந்து அழியப் புகழை மேலும் தேடித் தரும் ஒரு புதிய பரம்பரையாக வளருவதற்கான வழி உருவாகும் என்பதே கல்விமான்களது கருத்து. நிறைவேறுமா?

'மேம்பாலம்' பத்திரிக்கைக்கு
ஜி.டி. நாயுடு இறுதிப் பேட்டி!

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் 1973-ஆம் ஆண்டில் 'மேம்பாலம்' என்ற ஒரு பத்திரிக்கை நிருபர் பா. இராமமூர்த்தி என்பவருக்கு, ஓர் இறுதிப் பேட்டி ஒன்றை வழங்கினார். அதை அப்படியே அவருடைய கருத்தாக நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. இதோ அந்த பேட்டி உரை!

'நாம் வெளிநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றி நமது சொந்த பரம்பரைப் பண்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டோம். அயல் நாட்டார் மோகத்திலே மூழ்கி விட்டோம்.